tamilnadu

img

சிபிஎம் 23ஆவது மாநில மாநாடு- மாவீரன் பகத்சிங் நினைவுதினம் தமிழகம் முழுவதும் செங்கொடியேற்றி கோலாகலம்

சென்னை, மார்ச் 23 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 91 ஆவது நினைவு நாளான மார்ச் 23 ஆம் தேதியை கொடி நாளாக அறிவித்து தமிழகம் முழுவதும் கட்சிக்கிளைகளில் செங்கொடி ஏற்றப்பட்டது. கட்சிக் கிளைகளில் பகத்சிங் உரு வப்படத்திற்கு  மாலையணிவித்து மரியாதை செலுத்தி, மாநில மாநாட்டை குறிக்கும் வகையில் 23 செங்கொடிகள் ஏற்றப்பட்டன. சென்னையில் உள்ள கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றினார். அப்போது செய்தியாளர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், மார்க்ஸ், லெனின் நூல்களை சிறை யில் இருந்தபோது படித்த பகத்சிங், இந்திய மக்களின் பிரச்சனைகளுக்கு சோசலிசமே தீர்வு என்று முழங்கினார். ‘சோசலிசமே மாற்று; மற்றதெல்லாம் ஏமாற்று’ என்பதை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பகத்சிங்  நினைவு நாளை கொடி நாளாக கடைப்பிடிக்கிறோம். ஒன்றிய பாஜக அரசு மக்களின் வாழ்வை சீர்குலைக்கும் நவீன தாராள மயக் கொள்கையை கடைப்பிடிக்கிறது. கொரோனாவிற்கு பிறகு பல கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்று விட்டனர். விவசாயிகள், தொழி லாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நவீன தாராளமய பொருளாதார கொள்கையை எதிர்த்த போராட்டத்தை தீவிரப்படுத்த மாநாடு திட்டமிடும்.

இந்து ராஷ்டிராவை நிர்ணயிக்க பாஜக முயற்சித்து வருகிறது. ஒன்றிய அரசு கார்ப்பரேட், இந்துத்துவா கூட்டு  அரசாக செயல்படுகிறது. ஒன்றிய அர சின் நவீன தாராளமயக் கொள்கை, பாஜகவின் வகுப்புவாத மதவெறி கொள்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இலங்கையை போன்றே இந்தியா விலும் விலைவாசி உயர்ந்து கொண்டே  இருக்கிறது. சிலிண்டர் 50 ரூபாய், பெட்ரோல் லிட்டருக்கு 85 பைசா என உயர்த்தியுள்ளனர்.  டீசல் மொத்த கொள்முதலுக்கான விலையையும் கடுமையாக உயர்த்தி உள்ளனர்.

தமிழகத்தில் சாதி ஆணவக் கொலை, பாலியல் வன்கொடுமை, தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் கள் தொடர்கின்றன. இவற்றிற்கெதி ராகவும், மக்கள் ஒற்றுமை, மதச்சார் பின்மை, கூட்டாட்சி, சுயசார்பு பொருளா தாரத்தை பாதுகாக்க இந்த மாநாடு நடை பெறுகிறது. அதில், எதிர்கால அரசியல் கடமைகள் தீர்மானிக்கப்படும். அமைப்புசார் முடிவுகள் எடுக்கப்படும்.  இந்த மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவித்தார். இந்நிகழ்வின்போது மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, மாநிலக்குழு உறுப்பினர்கள் க.உதயகுமார், வே.ராஜசேகரன், அலு வலகச் செயலாளர் வில்சன், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை

தென்சென்னை மாவட்டம் வேளச் சேரியில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மத்திய சென்னையில் அர சியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம், வடசென்னையில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜனும் கலந்து கொண்டனர்.