tamilnadu

img

இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை!

தஞ்சாவூர், நவ.23 - வரும் காலங்களில் அரசு வேலைவாய்ப்பில், இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது என்று தமிழ் வளர்ச்சி - செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் மு.பெ.சாமிநாதன் கூறினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் சனிக்கிழமையன்று தமிழ்க்கூடல் மாநாடு நடைபெற்றது.  இதில் தமிழ் வளர்ச்சி - செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:  இளம் சமூகத்தினர் தாய்மொழியை விட்டு விலகிச் செல்வது வேதனையாக உள்ளது. தமிழ் சங்கத்தினர், சான்றோர்கள் நினைத்தால் அதனை மாற்ற முடியும். பல்வேறு தமிழ் அமைப்பினரை ஒரு குடையின்கீழ் ஒருங்கிணைத்திருப்பது பெருமைக்குரியது.  தமிழுக்குத் தன் மனதிலும் ஆட்சியிலும் உயர்ந்த இடம் தந்தவர் முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வரும் காலங்களில் அரசு வேலைவாய்ப்பில், இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.  தஞ்சையில் சோழர் அருங்காட்சியகத்திற்கான மாதிரி படங்கள் தயாராக உள்ளன. திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும். தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் இடைநீக்கம் விவகாரத்தில், எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. விசாரணைக் குழுவின் முடிவுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.