சென்னை, டிச. 6- கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றம் செய்திட உரிய நடவடிக்கை வேண்டும் என தமிழ்நாடு முது நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.பெருமாள்சாமி, பொதுச்செயலாளர் சே.பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர். உடன் மாநிலப் பொருளாளர் பொ.அன்பழ கன், அமைப்புச் செயலாளர் வ.நாராயணன், தலைமையிடச் செயலாளர் எ.ராவணன், சட்டச் செயலாளர் சந்திரபோஸ், பிரச்சாரச் செயலாளர் வடிவேல் முருகன், செய்தித் தொடர்பு செயலாளர் ம.மகேந்திரன், அரசு உதவி பெறும் பள்ளிச் செயலாளர் ஆ.ராஜா, மகளிர் பிரிவு செயலாளர் சி.லலிதா ஆகியோர் இருந்தனர். அந்த மனுவின் சுருக்கம் வருமாறு:
கடந்த காலங்களில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிய தமிழக முதல்வருக்கும், பள்ளி கல்வித்துறை அமைச்ச ருக்கும் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றம் செய்திட நடவடிக்கை வேண்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு பெற வேண்டும். மாணவர் நலனுக்கு எதிரான மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும். 14க்கும் மேற்பட்ட அரசு நலத்திட்டங்களை செழுமைப்படுத்தவும் கற்றல், கற்பித்தல் பணியை மேம்படுத்தவும் அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும். 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான கையேட்டினை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்து வம் மற்றும் பொறியியல் படிப்பு சேர்க்கையின் போது 2.5 சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மேல்நிலைக் கல்விக்கு தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளிக ளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்க ளையும், எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளில் விலங்கியல், தாவர வியல் மற்றும் வணிகவியல் கணக்குப் பதிவியல் பாடங்களைக் கற்பிக்க தனித்தனி ஆசிரியர் களை நியமிக்க வேண்டும்.
1.04.2003 முதல் அமலில் உள்ள தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து நடை முறைப்படுத்த வேண்டும். இரண்டு ஆண்டு களாக நடைபெறாமல் இருக்கும் ஆசிரியர்க ளுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். மேலும் பொது மாறுதல் கலந்தாய்விற்கு 3 ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும் என்ற அரசாணையை திருத்தி ஓராண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் என்றும், புதிய நியமனத்திற்கும் பதவி உயர்விற்கும் உபரி ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கும் கால நிபந்தனையின்றி முன்னுரிமை அளித்திடும் வகையில் மாற்றி அரசாணை வெளியிட வேண்டும். 1.1.2003 முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை (ஒன்றிய அரசுக்கு இணையான) உடனடியாக வழங்கிடவும், 1.4.2020 முதல் நிறுத்தப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பலனை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.ஜி. ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கு தடையாக உள்ள அரசாணை 720இல் மாற்றம் செய்து ஒன்றிய அரசு பள்ளிகளில் உள்ளது போன்று செங்குத்து வடிவிலான பதவி உயர்வினை அமல்படுத்த வேண்டும். கள்ளர் சீரமைப்பு, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், அலகு விட்டு அலகு மாறுதல் அடிப்படையில் மாறுதல் பெற உரிய ஆணைகள் வழங்க வேண்டும். பள்ளிக்கல்வி துறையில் பிறப்பிக்கப்படும் அனைத்து அரசாணைகளும் விதிவிலக்கில்லா மல் அரசு கள்ளர் சீரமைப்பு துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கும் அமல்படுத்த வேண்டும்.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணி மூப்பு அடிப்படையில் இல்லாமல் தகுதி மற்றும் திறமை என்ற அடிப்படையில் உள்ளதை நீக்க வேண்டும். அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 30 ஆண்டுகள் பணி முடித்த அனை வருக்கும் ஒரு சிறப்பு வளரூதியம் அளிக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் செயல் இழப்பு செய்யப்பட்ட அரசாணை எண் 165, 17.9.2019ஐ முற்றாக விலக்கி கடந்த காலங்களில் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப கல்வித்துறை அனுமதித்த பணியிடங்களில் நியமனம் பெற்று ஊதியம் இன்றி பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஏற்பளிப்பினை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.