தஞ்சாவூர் மாநகரில் உள்ள குப்பை கிடங்குளை புறநகர் பகுதிக்கு கொண்டு செல்ல திட்டம்
தஞ்சாவூர், ஜுன் 6- தஞ்சாவூர் மாநகரில் உள்ள குப்பைக் கிடங்கை, புறநகர் பகுதிக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டு, அதற்கான பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சியில் வியாழக்கிழமை மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்தார். ஆணையர் கோ.கண்ணன் மற்றும் அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்கள் பேசுகையில், தஞ்சாவூரில் பல வார்டுகளில் புதை சாக்கடையின் மேன்ஹோல் உடைந்து, கழிவு நீர் வெளியேறுகிறது. பல வீடுகளில் கழிவுநீர் திரும்ப வீடுகளுக்கே வருகிறது. புதை சாக்கடையை சீரமைக்க, குடிநீர் இணைப்பு சீரமைக்க மாநகராட்சி பணியாளர்கள் பொதுமக்களிடம் ரூ.3 ஆயிரம் வரை பணம் கேட்கின்றனர். பணம் கொடுக்கவில்லை என்றால் வேலை செய்வதில்லை. இது தொடர்பாக ஆணையரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பூக்காரத் தெருவில் முருகன் கோவில் எதிரே உள்ள உயர்மின் கோபுர விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. தஞ்சாவூர் காமராஜர், சரபோஜி சந்தைகளில் கடைகளை வாட கைக்கு எடுத்தவர்கள் திரும்ப ஒப்படைத்துள்ளனர். ஆனால், அவர்களுக்கான வைப்புத் தொகையை வழங்காமல் மாந கராட்சி நிர்வாகம் இழுத்தடிக்கிறது, உடனே தொகையை வழங்க வேண்டும். தஞ்சாவூர் குந்தவை நாச்சி யார் கல்லூரி அருகே உள்ள ஃபுட் ஸ்ட்ரீட்டில் உள்ள கடைகளில், மேயர் பெயரை தவறாக பயன்படுத்தி பணம் வசூலிக்கின்றனர். அங்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அவர்களிடம் தினசரி வாடகை வசூலிக்க வேண்டும். தஞ்சாவூர் கீழராஜவீதியில் தினமும் மாலை நேரங்களில் தெருவோர கடைகளால் போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. இதை முறைப்படுத்த வேண்டும் என்றனர். இதற்கு பதிலளித்த மேயர் சண்.ராமநாதன், தஞ்சாவூர் மாநகராட்சியில் புதை சாக்கடை கழிவு நீர் அடைப்பை சீரமைக்க ஒரு வாகனம்தான் உள்ளது. அடுத்த வாரம் நான்கு வாகனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, புதை சாக்கடை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் யாரும் குடிநீர், கழிவுநீர் சீரமைப்புக்காக பணம் கொடுக்க வேண்டாம். அவ்வாறு கேட்டால் உரிய புகார் அளித்தால், அவர்கள் உடனடியாக வேலையை விட்டு நீக்கப்படுவார்கள். தஞ்சாவூர் மாநாகராட்சியில் ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பை கிடங்குக்கு தீர்வு காணும் விதமாகவும், மாநகராட்சியோடு இணையவுள்ள 14 ஊராட்சி களுக்கும் சேர்த்து குப்பைகள் சேகரம் மையம் அமைக்க புறநகர் பகுதியில் 18 ஏக்கரில் புதிய குப்பை கிடங்குக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அந்த இடம் மாநகராட்சியால் விலைக்கு வாங்கிய பின்னர் குப்பை கிடங்கு மாற்றப்படும் என்றார்.