tamilnadu

img

நோயாளிகள் நலனும், மருத்துவர் நலனும் - மரு. எஸ்.பெருமாள்பிள்ளை

கேள்வி: மாரடைப்பு வந்த முதியவரை காப்பாற்ற முயன்ற மருத்துவரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதே?

பதில்: ஆம். தெலுங்கானா மாநிலம், கம்மாரெட்டி மாவட்டத்துக்கு உட்பட்ட காந்தாரி மண்டல பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு, மாரடைப்பு ஏற்பட்டதாக கேதவாத் ஜாகையா நாயக் (60) அழைத்து வரப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் லஷ்மணன்(40) மற்றும் செவிலியர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். நோயாளியின் நிலை மோசமாக இருந்ததால், மருத்துவர் லஷ்மணன் அவரது நெஞ்சில் கை வைத்து அழுத்தி உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது திடீரென மருத்துவர் லஷ்மணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்தார். செவிலியர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேநேரத்தில் ஜாகையாவின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரது குடும்பத்தினர் வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு அவரும் உயிரிழந்தார்.

மருத்துவர் லஷ்மணன் மகபூபாத் மாவட்டத்தை சேர்ந்தவர். நிசாமாபாத் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். நம்மை பொறுத்தவரை, வீர மரணமடைந்த மருத்துவர் லஷ்மணனுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். ஒவ்வொரு மருத்துவரும் இது போன்ற நிலைமையில் தான் பணி செய்து வருகிறோம். அதாவது ஒயிட் காலர் ஜாப் White collar job என்று சொல்லப்படும் மருத்துவர்களின் உண்மையான நிலைமை என்பது இது தான்.

அதாவது பொதுவாக உயிருக்குப் போராடுபவரை காப்பாற்றும் போதும், மயக்க மருந்து சிகிச்சை, அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும்  சமயங்களிலும் மருத்துவர்களுக்கு அட்ரீனலின் உள்ளிட்ட ஹார்மோன்கள் அதிகப்படியாக சுரக்கிறது (Adrenaline drive). அப்போது உச்சக்கட்ட மனஅழுத்தம் ஏற்படுகிறது. மேலும் தொடர்ந்து  இது போன்ற தருணங்களை அடிக்கடி எதிர்கொள்ளும் மருத்துவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

அதுவும் தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் தரப்படாததால், வேறுவழியின்றி, தங்கள் ஓய்வு நேரத்தில் கூட போதிய ஓய்வு எடுக்காமலும், தங்கள் உடல்நலத்தை கவனிக்க முடியாமலும்  பிரைவேட் பிராக்டிஸ் (Private practice)  பண்ண வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது தான் வருத்தமான உண்மை. மேலும் தமிழகத்தில் எத்தகைய அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டாலும், நம் சுகாதாரத் துறையில் எத்தனை புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டாலும், சிரமத்தை பொருட்படுத்தாது அர்ப்பணிப்போடு பணி செய்து வருகிறோம்.கொரோனா வந்தாலும், அதை எதிர்கொள்ள ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றவாறு, ஒவ்வொரு அரசு மருத்துவரும் இங்கு தயாராக இருக்கிறோம் என்பதை நாம் உறுதியுடன்  தெரிவித்துக் கொள்கிறோம்.