tamilnadu

img

திருச்சி முக்கிய செய்திகள்

பட்டா வழங்கக்கோரி மனு கொடுக்கும் இயக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் பகுதி குழு மற்றும் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியக் குழு சார்பில், வெள்ளியன்று திருவெறும்பூர் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. திருச்சி திருவெறும்பூர் பர்மா காலனி, காவேரி நகர், திடீர் நகர் பகுதி மக்களின் வீடுகளுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். 1927 எஸ்.எல்.ஆர் படி அளவீடு செய்து அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.  மனு கொடுக்கும் இயக்கத்திற்கு வடக்கு கமிட்டி ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கர் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, திருவெறும்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ரவிக்குமார், காட்டூர் பகுதிக்குழுச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் பேசினர். இதில், நிர்வாகிகள் பாண்டியன், சந்தோஷ், கண்ணகி, ஜாஹிர்உசேன் உள்பட அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தோழர் கே.செல்வராஜ் காலமானார்

திருவாரூர் அருகே உள்ள தப்பளாம்புலியூர் கிராமத்தில் வசிக்கும் சிபிஎம் கட்சியின் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினரும், கட்சி உறுப்பினருமான தோழர் கே.செல்வராஜ்(65) உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். இவர், திருவாரூர் வாலிபர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.எஸ். கோசிமணியின் தந்தை ஆவார். தோழரின் மறைவு செய்தி அறிந்த சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சுந்தரமூர்த்தி, எம்.சேகர், பா.கோமதி, கே.ஜி. ரகுராமன் ஆகியோர் தோழரின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். திருவாரூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுந்தரையா, நகரச்செயலாளர் எம்.டி. கேசவராஜ், மூத்த தோழர்கள் என். இடும்பையன், ஜி.பவுன்ராஜ் மற்றும் வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கே. வேலவன், தலைவர் எம்.எஸ். ஜெய்கிஷ் மற்றும் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள், வர்க்க வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள், தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கிராம வேளாண் பணி அனுபவத் திட்ட துவக்க விழா

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தில், புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு வேளாண் பட்டப்படிப்பு மாணவிகளின் கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத் துவக்க விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு, பேராவூரணி வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ராணி, உதவி வேளாண் அலுவலர் க.கார்த்திகேயன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக, ஓய்வு பெற்ற வேளாண் உதவி இயக்குனர் கே.ஆர்.கோவிந்தராஜன் கலந்து கொண்டு, வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.  மேலும், இத்திட்டத்தின் நோக்கம் குறித்தும் வேளாண் பயிற்சியில் செய்யவிருக்கும் செயல் விளக்கம் பற்றியும் அக்குழு மாணவிகள் எடுத்துரைத்தனர்.  ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியைகள் ச.செந்தாரகை, ச.லேகா பிரியங்கா நடைமுறை வேளாண் செய்முறைகளை நேரடியாக விவசாயிகளுக்கு செய்து காட்டு மாறு அறிவுறுத்தினர். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரி யர்கள் வே.திருமால் கண்ணன், த.வினோதா, வேளாண் உதவி அலுவலர்கள், புஷ்கரம் வேளாண் கல்லூரி பேராசிரி யர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.