அறவழியில் பொருளீட்டு அதில்சிறிதை உலகூட்டு
பிறவழியில் ஈட்டுபொருள் பிதற்றியழ நீங்கிவிடும்!
பிறன்பொருளைக் கொள்ளுகின்ற பேராசை விட்டுவிடு
வரமாகும் உழைப்பாலே வாழ்க்கையை வென்றுவிடு!
புறங்கூறி வாழாதே! பொய்கூறி வீழாதே!
அறநூலைத் தேடிப்படி!அதைநீயும் வாழ்வில்பிடி!
குறையகல வாழ்வாய்!குவலயத்தில் உயர்வாய்!
நிறைவாகும் செயலாலே நீடுபுகழ் பெறுவாய்!
உழைப்போரின் துயரத்தை உடைத்திடவே போராடு!
தழைத்திடவே அவர்வாழ்வு தாங்கிடுவாய் வேரோடு!
உழைப்போரை உறிஞ்சுகின்ற உலகத்தை நீமாற்று!
பிழையான முதலாளி பின்புலத்தை நீதூற்று!
அன்பாலே வையத்தைக் அணைத்துக் கொள்வாய்!
பண்பான செயலாலே பாரில் வெல்வாய்!!
கண்போன்ற தேசத்தைக் காத்து நிற்பாய்!
கன்னல்மொழித் தமிழைக் கருத்தாய் ஏற்பாய்!
இளமையிலே உன்புகழை உலகில் ஏற்று!
களத்தினிலே கயவர்களின் செயலைத் தூற்று!
உளத்தினிலே உயர்ந்தநல் உறுதி போற்று!
வளம்பெறவே நாட்டுமக்கள் வலியை ஆற்று!
கோவி.பால.முருகு