சென்னை, ஜன. 23 - பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடரின் 6-வது நாளில், (ஜனவரி 10), பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒன்றிய சட்டங்களான பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா ஆகிய சட்டங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருத்தங்களைக் கொண்டு வந்தார். “பிரிவு - 64 (1) - பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு 14 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை. குற்றவாளியின் கடுங்காவல் ஆயுட்காலம் வரை நீட்டிக்கப்படும் பட்சத்தில், இயற்கையாக மரணிக்கும் வரையில் சிறையில் காலத்தை கழிக்க வேண்டும். இவ்வழக்கில் பிணை வழங்கப்படாது. பிரிவு 65 (2) - 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிக்கு ஆயுட்காலம் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். மேலும், ஒரு கால அளவிற்கு அபராதம் மற்றும் மரண தண்டனை விதிக்கப்படலாம். பிரிவு 70 (2) - 18 வயதுக்குட்பட்ட பெண்ணை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு ஆயுட்காலம் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு கால அளவிற்கு அபராதம் மற்றும் மரண தண்டனை விதிக்கப்படும். பிரிவு 71 - மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பிரிவு 72 (1) - பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால், குறைந்தது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அது ஒரு கால அளவில் ஐந்தாண்டு வரையிலும் நீட்டிக்கப்படும். பிரிவு 77 - பாலியல் நோக்கத்துடன் மறைந்து இருந்து பார்க்கும் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் அல்லது ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை நீட்டிக்கப்படும்” என்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட 2 சட்ட முன்வடிவுகளும் ஜனவரி 11 அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநரின் ஒப்புதலை அடுத்து, அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.