tamilnadu

மதுரை மற்றும் திருநெல்வேலி முக்கிய செய்திகள்

ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி.யா? எடப்பாடி பழனிசாமி நழுவல்

மதுரை, மே 18-தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்தரநாத் என கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளதே என முதல்வர் எடப்பாடியிடம் கேட்டதற்கு அது தனது கவனத்துக்கு வரவில்லை எனக் கூறி சாமர்த்தியமாக நழுவிக்கொண்டார்.மதுரை விமான நிலையத்தில் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்டங்கள் தோறும் உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பருவ மழை சரியாக பெய்யாததாலேயே கடுமையான வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தலுக்கு முன்னரே இது குறித்து நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அண்ணா பல்கலை கழகத்தில் அரசின் தலையீடு இருப்பதாக துணைவேந்தர் சூரப்பா வைத்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனக் கூறிய முதல்வர், தேர்தல் நேரத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்தரநாத் என கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த எடப்பாடி பழனிசாமி. இது குறித்து தனது கவனத்துக்கு வரவில்லை எனக் கூறி சாமர்த்தியமாக நழுவிக்கொண்டார்.


மாஞ்சோலை சுற்றுலா செல்ல தற்காலிக தடை

திருநெல்வேலி, மே 18-மணிமுத்தாறு அருவி பகுதி வரை மலையில் சாலையை புதுபிக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்ல தற்காலிகமாக வனத்துறை தடை விதித்துள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட மணிமுத்தாறு வனசோதனை சாவடியிலிருந்து தலையணை வரையில் சாலை அமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை மணிமுத்தாறு அருவி பகுதியிலிருந்து சாலை அமைக்கும் பணி நடை பெறஉள்ளதால் சுற்றுலாத் தலப் பகுதிகளான மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி, மாஞ்சோலைப் பகுதிகளில் சனிகிழமை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகமாக அனுமதியில்லை என வனத்துறை அறிவித்துள்ளது.