tamilnadu

img

குடும்பங்களிலும், பொதுவெளியிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட களமிறங்குவோம்! - கே.பாலகிருஷ்ணன்

ஒட்டுமொத்தத்தில் வீடு, கல்வி நிலையங்கள், பணியிடங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், பொதுவெளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலே நீடித்து வருகிறது. இச்சூழலை மாற்றுவதற்கு மனிதநேயம் உள்ள  அனைவரும் அவசர, அவசியமாக களமிறங்க வேண்டிய காலமாக இன்றைய நிலை உள்ளது.

கொல்கத்தாவில் மருத்துவ முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் இந்தியா முழுவதும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பள்ளியில் நடத்தப்பட்ட போலி  என்.சி.சி முகாமில், மாணவியர் பாலியல் துன்புறுத்த லுக்குள்ளாக்கப்பட்ட செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் மாதத்தில், புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தி யது. வலுவான போராட்டத்திற்குப் பிறகுதான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். இங்கு சமீபத்தில் தந்தையே தனது மகளை பாலியல் கொடுமைக்குள்ளாக்கி கைதான சம்பவம் நாகரீக உலகிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. திருச்சியில் என்.ஐ.டி.யில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஊழியர் கடும் போராட்டத்திற்கு பின்னரே கைது செய்யப்பட்டார். வால்பாறையில் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உ.பி.யின் கொடூரங்கள்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து இது போன்ற சம்பவங்கள் குறித்த செய்திகள் வருகின்றன. சமீபத்தில், ஆசிரியரால் வல்லுறவு செய்யப்பட்ட உ.பி., மாணவி சிகிச்சை பலனின்றி மரணமடைந்த செய்தி வந்தது. மனநலம் பாதித்த பெண்ணுக்கு  வல்லுறவு, கைகளையும், கால்களையும் கட்டிப்போட்டு வல்லுறவு என அந்த மாநிலத்தில் அடுத்தடுத்து பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.

கேரளத்தை உலுக்கிய ஹேமா கமிட்டி

அனைத்திற்கும் மேலாக நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை கேரள மாநிலத்தை உலுக்கி வருகிறது. பாலியல் புகார் காரணமாக கேரள நடிகர்கள்  பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. பாலியல் புகார் கொந்தளிப்பால் கேரள திரைத்துறையே திக்குமுக்காடி வருகிறது. திரைப்பட நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.  பாலியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதில், அரசியல் உறுதிப்பாட்டுக்கு உள்ள தொடர்பினை எடுத்துக் காட்டும் மிக முக்கிய ஆவணமாக ஹேமா குழு அறிக்கை அமைந்துள்ளது. திரைத்துறை, பெண்கள் கூட்டமைப்பின் கோரிக்கையும், தொடர் வலியுறுத்த லும், கேரள அரசாங்கத்தின் முன்னெடுப்பும் காரண மாக அமைக்கப்பட்ட இந்த குழு, நாட்டிற்கே முன் மாதிரியாக அமைந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானா திரைத்துறைகளிலும் பாலியல் புகார்கள் புயலாக எழுந்துள்ளன. ஏற்கனவே அமைக்கப்பட்ட விசார ணைக்குழு அறிக்கையை வெளியிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பலரும் வற்புறுத்தி வருகின்றனர். இதேபோல தமிழக திரைத்துறையிலும் பாலியல் புகார்கள் வலுவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காலங்காலமாகவே பெண்கள் பாலியல் கொடூரத்திற்கு உட்படுவது வாடிக்கையாக உள்ளதாக தமிழ்நாட்டில் உள்ள சில மூத்த நடிகையர்கள் அழுத்தமாக குரலெழுப்பியுள்ளனர். கேரளாவைப் போல விசாரணைக்குழு அமைக்க வேண்டுமெனவும் ஒரு பாதுகாப்பான சூழல் திரையுலக பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென வற்புறுத்தி வருகின்றனர்.  கடந்த காலங்களில் திரைத்துறையில் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளானவர்கள் கொதித்து எழுந்த போது மொத்த சமூகமும் பார்வையாளராகவே இருந்தது. இதனால், புகார் கொடுத்தவர்கள் பழிவாங்கப்பட்டு அவர்களது வாய்ப்புகள் பறிக்கப்பட்டு திரையுலக வாழ்வு முடக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இப்போதும் திரையுலக நடிகைகள் வெளிப்படையாக புகார் அளிக்க அஞ்சி வருவதாகவே செய்திகள் உள்ளன. இந்த குற்றங்கள் குறித்து சர்ச்சை நடந்து கொண்டுள்ள சூழ்நிலையில் சில திரையுலக பிரபலங்கள் தங்களுக்கு எதுவுமே தெரியாது என கடந்து போவது பாலியல் கொடுமைகள் இழைத்தவர்களுக்கு பக்க பலமாக இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.  தனித்தனியாக எழுதினால் எழுத முடியாத அளவிற்கு பாலியல் வன்குற்றங்கள் அதிகரித்துவிட்டன என்பதைத்தான் நிலைமைகள் எடுத்துக் காட்டுகின்றன.

12 சதவீதம் அதிகரிப்பு

தேசிய குற்ற ஆவணக் காப்பகம், கடைசியாக வெளியிட்ட அறிக்கையின்படி, முந்தைய ஆண்டை விடவும் பெண்கள் மீதான வன்முறைகள் 4 சதவீதம் அதிகரிப்பு எனத் தெரிய வருகிறது. 2020ஆம்  ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2022ல் 12சதவீதம் அதிகரிப்பு என கடந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 2022இல், பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை 4,45,256. இந்த எண்ணிக்கை 2021இல் 4,28,278ஆக இருந்தது.  கடந்த 2012 ஆம் ஆண்டில், தலைநகர் தில்லியில் கொடூர பாலியல் வன்கொலை செய்யப்பட்ட நிர்பயா வழக்கும் போராட்டங்களும் நாட்டையே உலுக்கின. இதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட வர்மா கமிஷன் சிபாரிசின்பேரில் பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் மேலும் வலுவாக்கப்பட்டன. நிர்பயா நிதியும், சிறப்பு நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால், பாலின சமத்துவம், குற்றத்தடுப்பு என்ற  நோக்கில் உறுதியான செயல்பாடுகள் இருந்தனவா என்ற கேள்வியைத்தான் இன்றும் தொடர்ந்து அதிகரிக்கும் பாலியல் வன்குற்றங்கள் எழுப்புகின்றன.இந்தக் கேள்வியை அரசியல் மற்றும் சமூகம் என இரண்டு தளங்களிலும் எழுப்பிட வேண்டியுள்ளது. முதலில் இந்தக் கேள்வியை, அரசியல் தளத்தில் ஆராய்வோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் அரசியல் உறுதிக்கு நிச்சயம் பெரும்பங்கு உள்ளது.

பாலியல் குற்றங்களில்  பாஜகவின் பங்கு

மணிப்பூர் மாநிலத்தில், ஆண்டுக்கணக்கில் தொடரும் வன்முறைகள் அந்த மாநிலத்தையே சிதைத்துக் கொண்டுள்ளன. அந்த வன்முறையின் தீவிரத்தை; கொடூரத்தை நாட்டுக்கே தெரியச் செய்த பாலியல் வன்முறைக் காட்சிகளை இப்போதும் மறக்க முடியாது. அந்த கொடூரச் சம்பவம் நடந்து கொண்டிருந்த போது, அந்த மாநில பாஜக அரசின் முதலமைச்சர், வன்முறைக் கும்பல்களின் பக்கம் நின்றார் என்பது தற்போது வெளியாகியுள்ள ஆடியோ பதிவுகளில் தெரிய வந்துள்ளது. ‘வயர்’ இதழ் வெளி யிட்டுள்ள அந்த உரையாடல் பதிவுகள், தற்போது நீதி விசாரணை ஆணையத்திடம் தரப்பட்டுள்ளன. அந்த பதிவுகளில், நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட பெண்களைப் பற்றியும் வருகிறது.  அந்த  பெண்களை சூழ்ந்து துன்புறுத்தல் செய்த மெய்டெய் இன ஆண்களைப் பற்றிப் பேசும் அவர் “நம்மை அவமதிக்கிறார்கள். அவர்களை பார்த்துக் கொண்டு, உடை அணிவித்து, அனுப்பி வைத்ததற்காக நம்மைப் பாராட்ட வேண்டும்” எனக் குறிப்பிடுகிறார். பாலியல் வன்முறைக் கும்பலுக்கு ஒரு முதலமைச்சரே, ஆதர வாக நிற்பது வன்முறையை மேலும் தீவிரப்படுத்தவே உதவியது. இன்று வரை மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் இறுதி வரை நின்று போராடிய வினேஷ் போகத் மற்றுமொரு உதாரண மாக நிற்கிறார். அவருடைய போராட்டம் நாடே அறிந்தது. மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்துகொண்டு, வீராங்கனைகளுக்கு பாஜக முன்னாள் எம்.பி., பிரிஜ் பூசன் சரண் சிங் இன்று வரையிலும் பாதுகாக்கப்படுகிறார். ஆனால் அந்த வீராங்கனைகளோ குற்றம் இழைத்த நபரின் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதற்கே மாதக் கணக்கில் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தில், பாஜக கூட்டாளியான மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா நிகழ்த்திய பாலியல்  வன்குற்றங்கள் நூற்றுக்கணக்கான காணொலி களின் வழியாக அம்பலமாகின. ஆனால் அவர்  அரசியல் நோக்கத்துடன் வெளிநாட்டுக்கு தப்ப விடப்பட்டார். நாட்டின் உள்துறை அமைச்சருக்கு, பாஜக வின் நிர்வாகிகளால் அனுப்பப்பட்ட புகார்களே உதா சீனம் செய்யப்பட்டன. 

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களும் அரசியல்  செல்வாக்குள்ளவர்களும் பாலியல் கொடுமைகளை இழைப்பது தனது செல்வாக்கை பயன்படுத்தி தப்பித்துக் கொள்வது தொடர்கதையாகி வருகின்றன. தற்போதைய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் களில் கணிசமானவர்கள் பாலியல், கொலை வழக்கு களின் கீழ் விசாரணையில் உள்ளவர்கள் என்ற செய்தி உள்ளது.

விரைவான நீதிக்கு தேவை அரசியல் உறுதி

பாலியல் குற்றங்களுக்கு விரைவாக நீதி வழங்கு வது, முன்னெடுக்கப்பட வேண்டிய அரசியல் உறுதி யின் மற்றுமொரு அம்சம் ஆகும். கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தின் சாட்சியங்களை மறைக்கும் விதத்தில் காவல்துறை  நடந்துகொண்டது என்பதுதான் இப்போது நடக்கும் போராட்டங்களின் எழுச்சிக்கு முக்கியக் காரணம். பல்வேறு வழக்குகளிலும் காவல்துறையின் மெத்த னம், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிட்டு அதன் மூலம் வழக்கை சிதைக்கும் முயற்சி கள் என விசாரணை அமைப்புகள் தவறு செய்கின்றன. ஒரு வேளை வழக்குகள் நீதிமன்றத்திற்குச் சென்றால், அங்கே தீர்ப்புக்காக 5 முதல் 15 ஆண்டு கள் வரையில் போராட வேண்டிய நிலைமை உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து  வழக்கை நடத்துவதற்கு சாதகமான சமூக சூழல் உள்ளதா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

இரண்டாம் கட்ட பாதிப்புகள்

ஒரு பெண் மீது பாலியல் வன்முறை நிகழ்த்துவது முதல்கட்ட பாதிப்பாக உள்ளது. அப்பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்காடி நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு தண்டனை வரபெற்றுவிடுவது என்பது இரண்டாம் கட்ட பாதிப்பாக உள்ளது. பாலியல் கொடுமைக்குள்ளான பெண்கள் நீதி பெறுவதற்குள் அனுபவிக்கும் சித்ரவதைகள் குறித்து,  முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை வழக்கறிஞர் உ. நிர்மலா ராணி முடித்துள்ளார். “இந்திய குற்றவியல் நீதி அமைப்பில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இரண்டாம்  நிலை பாதிப்பு:  பாலினம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளின் பார்வையில் இருந்து” என்பதே அந்த ஆய்வறிக்கை. நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட பெண்களின் மனக்குமுறலை தொகுத்து ஆய்வறிக்கையினை தயாரித்துள்ளார். அதில் ஒருவரது மனவேதனையை கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார்:

“பாலியல் ரீதியாக ஒருவரால் ஒரே ஒரு முறைதான் நான்  தாக்குதலுக்கு ஆளானேன். மிகக் கொடூர மான ஒன்றாக இருந்தபோதிலும், அது, ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே நேர்ந்த ஒரு சம்பவம். ஆனால், நீதிமன்றத்தின் கதவுகளை நான் தட்டத் தொடங்கியபோது, மீண்டும் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாவதை நான் உணரத் தொடங்கினேன். காவல் துறை நான் கூறுவதை நம்பாமல் இருந்தபோது; சட்டத்தை நிலைநாட்டும் பொறுப்பை ஏற்றிருந்த ஒவ்வொருவரிடமும் அந்த சம்பவத்தை மீண்டும் மீண்டும் ஆழமாக விவரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நான் ஆளானபோது; மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் எனது அந்தரங்க உறுப்பு மீண்டும் அத்து மீறலுக்கு ஆளானபோது; நீதிமன்றத்தில் முன்பின் அறியாதவர்கள் சூழ்ந்திருக்க, அந்தக் கொடூரமான சம்பவத்தை மீண்டும் நினைவு கூர்ந்து, எனது உடலுறுப்புகளை ஒவ்வொன்றாக விவரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானபோது; குறுக்கு விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பு வழக்கறி ஞரால் எனது நடத்தை நீதிமன்றத்தில் படுகொலை  செய்யப்பட்டபோது; சமூகத்தால் நான் களங்கப் படுத்தப்பட்டபோது என மீண்டும் மீண்டும் நான் தாக்குதலுக்கு ஆளானேன். என்னை வன்கொடுமை செய்தவன் ஒரு அப்பாவி; நான் ஒரு கொடிய பெண் என்ற ஒரு தீர்ப்பினை பெறுவதற்காக இத்தகைய அதிர்ச்சிகள் அனைத்தையும் நான் அனுபவிக்க வேண்டியிருந்தது. அத்தகைய நேரங்களில்தான்  உண்மையாகவே நடந்த அந்தக் கொடுமையான தாக்குதலை விட மேலும் மேலும் அதிகமாக நான் பெற்ற  துன்பத்தால் என் இதயத்தில் ரத்தம் கசிந்தது.”

-ஆய்வில் பங்கேற்றவரின் வாக்குமூலம்
 

சொல்ல முடியாத துயரங்கள்

பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கும் துயரம் சொல்லிமாளாது. கொலை, கொள்ளை  தாக்கு தலுக்குள்ளான யார் ஒருவரும் தனது தாக்குதலை பொது வெளியில் / வழக்குமன்றங்களில் பகிரங்க மாக பேச முடியும். ஆனால், பாலியல் கொடுமை களுக்கு ஆளான ஒவ்வொரு பெண்ணும் பொதுவெளி யில் அவமானப்படுத்தப்பட்டுத்தான் நிற்க வைக்கப்படு கிறார். கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை விட மோசமாக நடத்தப்படும் சமூகச் சூழலே உள்ளது. உண்மையில் இவர்கள் உயிருடன் பிரேத பரிசோதனை செய்யப்படும் நிலையே உள்ளது. பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் காவல்நிலையத்தில், மருத்துவ சோதனை களில், நீதிமன்றங்களில் சந்திக்கும் எண்ணற்ற பிரச்சனைகளை முனைவர் நிர்மலா ராணி பட்டிய லிட்டுள்ளார். பாதிப்புக்குள்ளானவர்கள் சமூகத்தின் கொடூர பார்வையிலிருந்து தப்பித்துக் கொள்ள பலர் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொள்வது, பதுங்கி  வாழும் நிலைக்கு தள்ளப்படுவது என விவரித்துள்ளார். பாலியல் புகார் அளித்த ஒரு பட்டியலின பெண்ணின் வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட ‘உயர்’ சாதியைச் சார்ந்தவர்கள் பட்டியலின பெண்களை தொட்டு பாலியல் வல்லுறவு செய்திருக்க மாட்டார்கள் என காரணம் கூறியுள்ளார்.

ஒரு பச்சிளம் குழந்தையின் வழக்கை விசாரித்த நீதிபதி அக்குழந்தையின் அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏதும் இல்லை, மேலும் இக்கொடுமை நடந்தபோது அக்குழந்தை அழுது அடுத்தவர்கள் உதவியை நாடாமல் இருந்துள்ளது என காரணம் கூறி தள்ளுபடி செய்துள்ளார். வேதனைகள் நிறைந்த இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்களை தனது ஆய்வறிக்கையில் தொகுத்துள் ளார் வழக்கறிஞர் உ. நிர்மலா ராணி அவர்கள்.  பாலியல் வல்லுறவு குற்றங்கள் நடந்தவுடன் நீதித்துறை நடுவர் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும் என சிஆர்பிசி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த நடைமுறையை பெரிதும் பின்பற்றவில்லை. பாலியல் தொல்லைக்குள்ளானவர்களை 24 மணி நேரத்திற்குள் மருத்துவ பரிசோதனை செய்து குற்றங்களை ஆவணப்படுத்த வேண்டுமென குற்றவியல் சட்டம் பிரிவு 164-ஏ கூறுகிறது. ஆனால் பல சம்பவங்களில் திட்டமிட்டே தாமதமாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. பாலியல் தொடர்பான வழக்குகளை விசாரித்து இரண்டு மாதங்களில் குற்றபத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென சட்டப்பிரிவு 173(1)(ஏ) கூறுகிறது. ஆனால் இது நடைபெறுவதில்லை.

4.4 லட்சம் வழக்குகள் நிலுவை

2022 நிலவரப்படி, இந்தியா முழுவதும் 801 மாவட்டங்களில் 4.4 லட்சம் பாலியல் துன்புறுத்தல் சார்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது உச்ச நீதிமன்றம் வழங்கிய தரவு.  ஏற்கனவே முடிவு செய்த இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்; நிலுவை வழக்குகள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்; சாட்சியங்களைப் பாதுகாக்கவும், அச்சமின்றி வழக்காடவும் சிறப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்  என்ற குரல்கள் மேலும் வலுக்கின்றன.  அரசியல் தளத்தில் வலதுசாரி சக்திகளை எதிர்த்து உரிய கட்டமைப்பை ஏற்படுத்துவதுடன் குடும்பங்கள், கல்வி நிறுவனங்கள், கலைத் துறைகளில் பாலின சமத்துவச் சிந்தனையை பரவலாக்குவது நம் முன் உள்ள இரட்டைக் கடமையாகும்.  பாலின சமத்துவ நோக்கில், பெண்களின் மாண்பு களை பாதுகாக்கும் வகையில் படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளை இச்சமூகத்திற்கு கொடுக்க வேண்டும். குடும்ப வன்முறைகளுக்கு எதிராகவும், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு எதிராகவும் தொடர் பிரச்சாரம் மூலம் குடும்பங்களையும், பொது வெளிகளையும் பாதுகாப்பாக்குவோம். நீதிக்காக போராடுவோருக்கு உடன் நிற்போம்.  நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்படவும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக செயல்படும் பெண்கள் சுதந்திர மாகவும், சுயேச்சையாகவும் பணியாற்றுகிற நல்ல சூழலை உருவாக்கவும் தொடர்ந்து உழைப்போம். வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் சமத்துவம்  நிலவ சமூகத்தில் பரந்த உரையாடலை உருவாக்கு வோம்.  கடந்த ஆண்டு, தக்கலையில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய பெண்ணுரிமைப் பாதுகாப்பு சிறப்பு மாநாட்டில் நாம் நிறைவேற்றிய தீர்மானங்களின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரிக்கிறது. இலக்கை புதுப்பித்து முன்னேறுவோம்.