tamilnadu

img

கொட்டாம்பட்டி - மேலூர் மக்களுக்கு ஓர் நற்செய்தி - சு.வெங்கடேசன் எம்.பி

கொட்டாம்பட்டி பேருந்து நிலையத்தை நவீனப்படுத்த வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் தலையிடத்தில் உள்ளது கொட்டாம்பட்டி பேருந்து நிலையம். அது கடந்த 10 ஆண்டுகளாக முறையான பராமரிப்பு ஏதுமின்றி, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. 
மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை  ஆகிய  மூன்று மாவட்ட எல்லைகள் சந்திக்கின்ற பகுதியாகவும் கொட்டாம்பட்டி இருப்பதனால் தினசரி 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் கொட்டாம்பட்டிக்குள் வந்து செல்கின்றன. 
எனவே பயன்படுத்த இயலாமல் சிதிலமடைந்துள்ள கொட்டாம்பட்டி பேருந்து நிலையத்தினால் மக்களுக்கும், பேருந்து போக்குவரத்திற்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே இதன் முக்கியத்துவம் கருதி இப்பகுதியின் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையத்தினை நவீனப்படுத்தி தரக்கோரி இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் நேரில் கோரிக்கை வைத்தேன். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்புகிறேன்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.