நியூயார்க்,நவ.3- கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தீர்மானத்திற்கு ஆதர வாக பொது அவையில் 187 நாடுகள் வாக்களித்துள்ளன. அக்டோபர் 30 அன்று ஐ.நா பொது அவையில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்திற்கு வழக்கம் போல அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் எதிராக வாக்களித்தன. ஐரோப்பிய நாடான மால்டோவா வாக்களிக்கவில்லை. கியூபாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளா தார, வணிக தடைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானத்தை 2020 ஆம் ஆண்டை தவிர 1992 முதல் ஒவ்வொரு ஆண்டும் கியூபா முன்வைத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை நாடுகள் அமெரிக்காவின் தடைகளுக்கு எதிராக கியூபா மீதான தடைகளை நீக்க வேண்டும் என வாக்களிக்கின்றன. இந்த ஆண்டு கியூபா புயலால் பாதித்த போது மிக மோச மான நெருக்கடியை அனுபவித்தது. அந்நாட்டின் மின்சாரத்துறை கடுமையான சேதங்களை சந்தித்தது. இத்துறையை மீண்டும் சமநிலைக்கு கொண்டு வந்து மின்னுற்பத்தியை துவங்குவதற்கு தேவையான நவீன உதிரி பாகங்கள் அமெரிக்காவின் தடையால் கியூபாவிற்கு கிடைக்கவில்லை. இது அந்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், அன்றாட வாழ்க்கையையும் கடுமையாக பாதித்தது. எனினும் கியூபா மீதான தடையை நீக்க பைடன் அரசு மறுத்ததுடன் கியூபாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றவும், கியூபா மீது டிரம்ப் ஜனாதிபதியாக இருக்கும் போது விதிக்கப்பட்ட 243 தடைகளை நீக்கவும் மறுத்துவிட்டது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட கியூபா ஆதரவாளர்கள் அந்நாட்டிற்கு தற்போது தேவையாக உள்ள அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக நிதி திரட்டி வருகின்றனர். இந்த சூழல்களுக்கு இடையே தான் அமெரிக்காவின் தடைகளை நீக்குவதற்காக ஐ.நா. அவையில் 2024 ஆம் இந்த ஆண்டுக்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அமெரிக்க அரசானது எல்லை தாண்டி பிற நாடுகளின் மீது தனது ஆதிக்கம், பொருளாதார சுரண்டல், வன்முறை மற்றும் இனப்படுகொலையைத் தொடர்ந்து வருகிறது. இந்த வாக்கெடுப்பின் ஆச்சரிப்படுத்தும் அம்சம் என்ன வென்றால் அமெரிக்காவின் தீவிர விசுவாசியாகவும், கைப்பவையாகவும் உள்ள ஜேவியர் மிலெய் ஆட்சி செய்யும் அர்ஜெண்டினாவின் தீவிர வலதுசாரி அரசு அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கியூபாவின் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளது. வாக்கெடுப்பு முடிந்த சில மணி நேரங்களில் அர்ஜெண்டினா வெளியுறவுத் துறை அமைச்சர் டயானா மொண்டினோவை பதவி நீக்கம் செய்வதாக மிலெய் அறிவித்தார். அதன் பிறகு தான் அர்ஜெண்டினா ஜனாதிபதி யின் ஒப்புதல் இன்றி அந்நாட்டின் வெளியுறவுத்துறை இந்த தீர்மானத்திக்கு ஆதரவாக வாக்களிக்க வழிகாட்டியுள்ளது என தெரிய வந்தது.