தோழர் கே.பி.ஜானகியம்மாள் 1917 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் நாள் பிறந்தார். அந்த காலத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி ஊர்வலங்கள் டவுன்ஹால் அருகிலிருந்துதான் புறப்படும். கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் வருவார்கள். ஊர்வலம் துவங்குவதற்கு முன்பு ஒரு பெண்தோழர் அங்கே வருவார். ஒவ்வொரு கிராமத்துப்பெயரை சொல்லி எவ்வளவு பேர் வந்திருக் கிறார்கள் என்று தோழர்களிடம் கேட்பார். ஏதாவது கிராமத்திலிருந்து தோழர்கள் வரவில்லையென்றால் ஏன் வரவில்லை என்று கவலையுடன் விசாரிப்பார். அவர் தான் தோழர் கே.பி.ஜானகியம்மாள். மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏழை, எளிய மக்களுக்கு சிறு பிரச்சனை என்றாலும் உடனே கிளம்பிவிடுவார். ஒரு கைப்பை, அதற்குள் சிறிய குடை, அதுதான் அவர் சொத்து. 1917ல் மதுரையில் பிறந்த ஜானகியம்மாள் எட்டாம் வகுப்பை முடித்த பின் நாடக கம்பெனியில் சேர்ந்து நடிப்புக் கலைஞரானார். அதே குழுவில் இசையமைப்பாளராக இருந்த குருசாமியை மணந்தார்.
1936 ஆம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்தவர், பின்னர் அதே ஆண்டில் சோசலிஸ்ட் கட்சியிலும், 1940 ல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து களப்போராளி ஆனார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானபோது, அதில் பல பொறுப்புகளை வகித்தார். போராட்டங்களை நடத்தி பல ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். 1967ஆம் ஆண்டில் மதுரை கிழக்கு தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குச் சென்றார். பொதுவுடைமை தத்து வத்தால் ஈர்க்கப்பட்டு வசதியான வாழ்க்கையைத் துறந்து தனது கணவருடன் இறுதிக்காலம் வரை தியாக வாழ்க்கை வாழ்ந்தார். விவசாய சங்கத்தையும், மாதர் சங்கத்தையும் உருவாக்கி வளர்த்ததில் இவருடைய பங்கு அலாதி யானது. இவர் உயிரோடு இருந்த காலத்திலேயே இவரின் வரலாறு ‘ ஒரு அம்மாவின் கதை ‘ என்ற பெயரில் வெளியானது. இவரது அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கை பெண் போராளிகளுக்கு முன்மாதிரி எனின் மிகையன்று. வரலாற்றில் இடம்பெற்ற தோழர் கே.பி. ஜானகியம்மாள் 1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் நாள் மறைந்தார். பெரணமல்லூர் சேகரன் மார்ச் 1: கே.பி.ஜானகியம்மாள் நினைவு நாள்