ஷாஜாதி நினைவு கொடி
கடலூர், செப். 30- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில 16ஆவது மாநாடு கடலூரில் வியாழனன்று (செப். 29) பேரணி பொதுக்கூட்டத்துடன் துவங்கியது. பொது மாநாடு வெள்ளியன்று (செப். 30) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தியாகிகள் சுடர்
மாநில மாநாட்டையொட்டி மாநிலம் முழுவதிலும் இருந்து தலைவர் களின் நினைவாக கொண்டு வரப்பட்ட நினைவுச் சுடர்களை தலைவர்களி டம் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை புறநகரில் இருந்து கொண்டுவரப்பட்ட கே.பி.ஜானகி அம்மாள் நினைவுச் சுடரை அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி பெற்றுக்கொண்டார். திருச்சியில் இருந்து கொண்டுவரப்பட்ட பாப்பா உமாநாத் நினைவுச் சுடரை மாநிலத் தலைவர்களில் ஒருவரான பி.ஜான்சிராணி பெற்றுக் கொண்டார். மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்ட லீலாவதி நினைவுச் சுடரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி பெற்றுக் கொண்டார். தென் சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட மைதிலி சிவராமன் நினைவுச் சுடரை அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் பெற்றுக்கொண்டார். வடசென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட என்.எஸ்.ருக்குமணி நினைவுச் சுடரை கலைச்செல்வி பெற்றுக்கொண்டார். தேனியில் இருந்து கொண்டுவரப்பட்ட கஸ்தூரி நினைவுச் சுடரை பாக்கியலட்சுமி பெற்றுக்கொண்டார்.
கன்னியாகுமரியில் இருந்து கொண்டுவரப்பட்ட டி.ஆர்.மேரி நினைவுச் சுடரை எஸ்.ராணி பெற்றுக்கொண்டார். மத்திய சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட பிருந்தா நினைவுச் சுடரை மகாலட்சுமி பெற்றுக் கொண்டார். கோவையில் இருந்து கொண்டு வரப்பட்ட வீரம்மாள் நினைவுச் சுடரை ஆர். மல்லிகா பெற்றுக் கொண்டார். புதுச்சேரியில் இருந்து கொண்டுவரப்பட்ட வெ.சந்திரா நினைவுச் சுடரை மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி பெற்றுக் கொண்டார். மதுரை மாநகரில் இருந்து கொண்டுவரப்பட்ட ச.ஞானம் நினைவுச் சுடரை மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா பெற்றுக் கொண்டார். நெல்லிக்குப்பத்தில் இருந்து ஷாஜாதி நினைவாக கொண்டுவரப்பட்ட மாநாட்டுக் கொடியை விஜயா பெற்றுக்கொண்டார்.
கொடியேற்று நிகழ்ச்சி:
மகளிரின் எழுச்சிமிகு முழக்கங்களுக்கு இடையே மாநில மாநாட்டு கொடியை மாநில துணைத் தலைவர் என்.அமிர்தம் ஏற்றி வைத்தார். பின்னர் தியாகிகள் நினைவுத் ஸ்தூபிக்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமையில் நடைபெற்ற பொது மாநாட்டில் மாநிலச் செயலாளர் பிரமிளா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.
மரியம் தாவ்லே
அகில இந்திய பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், கொரோனா காலத்தில் இந்தியா முழுவதும் 4 கோடி ரேசன் அட்டை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உணவு தானியங்கள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட உணவு, தானியம் எங்கே சென்றது என்று கேள்வி எழுப்பினார்.
வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம்
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்கள் தங்களது மதக் கோட்பாடுகளை காட்டி பெண்களை அடிமையாகவே வைத்திருக்க விரும்புகின்றன. அதில் இருந்து பெண்கள் விடுபட்டு இயக்கங்களில் ஈடுபட வேண்டும். ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக போராடிய பெண் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹிஜாப்பை கொளுத்தி வருவதோடு, பெண்களுக்கு எதிரான பிற்போக்குத்தனமான சட்டங்களை நீக்க வலியுறுத்தி அங்கே போராட்டம் நடைபெறுகிறது.
வன்கொடுமைகள் அதிகரிப்பு
பாலஸ்தீனத்திலும் பெண்கள் விடுதலைக்காக போராடி வருகின்றனர். கியூபா நாட்டில் குடும்பத்தை நிர்வகிப்பதில் ஆண்களுக்கும் சம பங்கு உள்ளது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு தண்டனையும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பெண்கள், சிறுமிகள் மீதான வன்கொடுமைகளும், சாதி, மத ஆணவப் படுகொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பாஜக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, மாறாக இதுபோன்ற சம்பவங்களை அரசியல் ஆதாயத்திற்காக ஊக்குவிக்கிறது. எனவே, இதற்கு எதிரான இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை மக்களிடையே அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மேயர் வாழ்த்து
கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா வாழ்த்திப் பேசுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதால் இப்போது நான் உட்பட ஏராளமான பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் உள்ளோம். நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றார். இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநிலச் செயலாளர் ஜி.மஞ்சுளா வாழ்த்திப் பேசினார். பின்னர் மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
சாதனை படைத்தவர்கள் கவுரவிப்பு
பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதனை படைத்த பெண்கள் மாநாட்டில் கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக, வரவேற்பு குழுத் தலைவர் ரேணுகாதேவி வரவேற்றார், மாவட்டத் தலைவர் வி.மல்லிகா நன்றி கூறினார். பின்னர் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி வேலை ஸ்தாபன அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். பொருளாளர் ஆர்.மல்லிகா வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். சனிக்கிழமை மாலை மாநாடு நிறை வடைகிறது. இம்மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பல முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன.