tamilnadu

img

சபாஷ் ஷபானா...

கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் ஹிஜாப் அணிந்துவந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து, சமீபத்தில் எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன் தனது டிவிட்டர் பக்கத்தில் இரானில் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் பெண்கள் எப்படி ஆடை அணிந்திருந்தார்கள், தற்போது அவர்கள் எப்படி ஆடை அணிகிறார்கள் என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார். அந்தப் பதிவைக் குறிப்பிட்டு பாலிவுட்டின் பிரபல நடிகை கங்கனா ரணாவத் இப்படி எழுதியுள்ளார்: “நீங்கள் உங்களது தைரியத்தைக் காட்ட விரும்பினால் ஆப்கானிஸ்தானில் புர்கா அணியாமல் இருந்து காட்டுங்கள். விடுதலையைக்  கற்றுக்கொள்ளுங்கள், குகைக்குள் அடைபடுவதையல்ல..!” - என்று ஒரு பதிவை இட்டிருக்கிறார்.  இதனிடையே கங்கனாவின் இந்தப் பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில் பிரபல பழம்பெரும்  பாலிவுட் கலைஞர்  ஷபானா ஆஸ்மி மிகக் கடுமையாகப் பின்னூட்டமிட்டிருக்கிறார். அதில், “ஆப்கானிஸ்தான் ஒரு மதவாத நாடு. ஆனால், நான் கடைசியாக அறிந்தவரையில் இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாகத்தானே இருந்தது?  எனக்கு இதைத் தெளிவுபடுத்துங்கள். நான் கூறுவது தவறென்றால் என்னைத் திருத்துங்கள்!” - என்று கூறியுள்ளார். அவர் சொல்லியிருப்பது நியாயம்தானே?  சபாஷ் ஷபானா!