தஞ்சாவூர், செப்.25 - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) உலக அளவில் பிரபலமான Green Mentors அமைப்பால் வழங்கப்படும் ‘சர்வதேச பசுமை பல்கலைக்கழக விருது 2024’ விருதை பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலைத்துவம் மற்றும் பசுமை கல்வியில் சிறப்பான பங்களிப்புகளை முன்னிட்டு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஒழுங்கு முறைகளில் முன்னிலை வகிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் புதுமையான பசுமை திட்டங்கள், மின்சாரத் திறன் மேம்பாட்டு முயற்சிகள், கழிவு குறைப்பு திட்டங்கள் மற்றும் நிலைத்த தொழில்நுட்பங்களுக்காக அங்கீகரிக்கப் பட்டது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறப்பான பங்களிப்பை உறுதி செய்கிறது. இந்நிறுவனத்தின் சார்பாக, மேரிலாந்து பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் அரசு செல்லையா, நியூயார்க் யுனைடெட் ஸ்டேட் ஆப் அமெரிக்காவில் நடந்த நியூயார்க் பசுமை மாநாட்டில் 2024 ஆம் ஆண்டிற்கான இந்த விருதினைப் பெற்றார். பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இரண்டாவது முறையாக இந்த விருதைப் பெறு வது குறிப்பிடத்தக்கது.