அன்னைத் தமிழைக் காப்பதற்காக மட்டுமல்ல; ஆதிக்க மொழித் திணிப்புக்கு எதிராக என்றும் குரல் கொடுப்பவர்கள் என்ற அடிப்படையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்மானத்தை முன்மொழி கிறேன். இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, இந்தி மொழியைத் திணிப்பதை தனது வழக்கமாகவே வைத்துள்ளது. ஆட்சி நிர்வாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கி, கல்வி மூலமாகத் திணிப்பதுவரை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பதுதான் என்று நினைக்கிறார்கள்.
பன்முகத்தன்மையால் பலன்
“ஒரே நாடு - ஒரே மதம் - ஒரே தேர்தல் - ஒரே தேர்வு - ஒரே உணவு - ஒரே பண்பாடு” - என்ற வரிசையில் ஒரே மொழியை வைத்து, மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்கப் பார்க்கிறார்கள். இந்தியா என்பது, பன்முகத்தன்மைக் கொண்ட நாடு. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், பண்பாடுகள் கொண்ட மக்கள் வாழும் நாடு, இந்தியா. வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டு, சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறோம். விடுதலை பெற்ற இந்தியா, ஓராண்டுகூட ஒற்றுமையாக இருக்காது என்று வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதிய நிலையில், நமது பன்முகத் தன்மையைக் காப்பதன் மூலமாக இந்தியா எழுபத்தைந்து ஆண்டுகளாகக் காப்பாற்றப்பட்டு வருகிறது.
நேரு அளித்த உறுதி மொழி மீறல்
பல்வேறு மொழியினர் வாழும் நாடு இது. ஆனாலும் மொழிவாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டதால் அனைத்து மொழியினரும் மனநிறைவோடு வாழ்ந்து வருகிறார்கள். பல்வேறு மத நம்பிக்கையாளர்கள் இருந்தாலும், இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மொழி பேசுபவர்களின் நாடாக இருந்தாலும், ஒரு மொழியின் ஆதிக்கம் இருக்காது என்பதை, இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்கள் உறுதிப்படுத்தி வந்திருக்கிறார்கள். ‘இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படாது. அவர்கள் விரும்பும்வரை ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்கும்’ என்று பிரதமர் நேரு அவர்கள் அளித்த உறுதிமொழிதான் இன்றுவரை இந்தி பேசாத பெரும்பான்மை மக்களைக் காக்கும் அரணாக இருக்கிறது.
மற்ற மொழிகள் புறக்கணிப்பு
எல்லையால் மட்டுமல்ல; எண்ணங்களாலும் ஒற்றுமை கொண்ட நாடாக இந்திய நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகை யிலான செயல்கள் அண்மைக் காலமாக நடந்து வருகின்றன. இதில் மிகமிக முக்கியமானது, இந்தி மொழித் திணிப்பு! இந்திமொழித் திணிப்பை பட்டவர்த்தன மாக ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்கிறது. இந்திமொழி தினம் கொண்டாடும் ஒன்றிய அரசு, மற்ற மாநில மொழிகளின் தினம் கொண்டாடுவது இல்லை. இந்தி மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் என்பது, மற்ற மொழிகளைப் புறக்கணிப்பதாக மட்டுமில்லை; அழிப்பதாகவும் அமைந்திருக்கிறது. இந்தியை ஆட்சிமொழியாக, அலுவல் மொழியாக மட்டுமல்ல; அதிகாரம் செலுத்தும் மொழியாகவும் பா.ஜ.க. அரசு உயர்த்திக் கொண்டு இருக்கிறது. மேலாதிக்கம் செலுத்தும் மொழியாக அதனை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த வரிசையில் கடந்த 13 ஆம் நாளன்று, ஆங்கில ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகி உள்ளன. அவை நமக்கு பெரும் கவலை அளிப்பதாக உள்ளன. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைக்கப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையானது, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆதிக்கத்தை வலுப்படுத்தும் அறிக்கை
நாட்டில் உள்ள இந்தி பேசும் மாநிலங்களில், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி.), மத்திய பல்கலைக்கழகங்களில், கேந்திரிய வித்யாலயா கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், போட்டித் தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்தியில் பணிபுரியாத அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வில் தேர்வாளர்களின் இந்திமொழி அறிவை உறுதிசெய்ய வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் அலுவலகங்கள், அமைச்சகங்கள், கடிதங்கள் போன்றவை இந்திமொழியில் இருக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளார்கள் என்று செய்திகள் மூலமாக தெரிய வருகிறது. முழுக்க முழுக்க இந்தியின் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் அறிக்கையாக இது அமைந்துள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியை வலுப்படுத்தும் போர்வையில் இந்தியா முழுவதும் இந்தியை வலுப்படுத்தவே துடிக்கிறார்கள். கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல் ஐ.ஐ.டி. வரை இந்தி மட்டும்தான் என்றால், மற்ற மொழி மக்களுக்கும் இந்தக் கல்வி நிறுவனங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தடுக்க நினைக்கிறார்கள். ஆங்கிலத்தை முற்றிலுமாக தடுப்பதன் மூலமாக, ஆங்கில அறிவையே முற்றிலுமாகத் தடுக்கிறார்கள். மாநில மொழி என்று ஒப்புக்காகச் சொல்கிறார்களே தவிர, முழுக்க முழுக்க இந்திக்காகவே துடிக்கிறது அவர்களது இதயம்.
மாநில மொழிகள் மீது இவர்கள் இவ்வளவு பற்று வைத்திருப்பது உண்மை யானால், அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும், இந்திக்கு இணையான ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்கத் தயாரா? அனைத்துத் தேர்வுகளிலும் கட்டாய ஆங்கிலமொழி வினாத்தாள் இருப்பதைக் கைவிடச் சொல்வதன் மூலமாக, அனைத்து இந்தியத் தேர்வுகளையும் இந்திமயமாக்கத் துடிக்கிறார்கள். இந்தி தெரியாதவர்கள் ஒன்றிய அரசுப் பணி பெறமுடியாத வகையில் இந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இனி நடக்கும் அனைத்துத் தேர்வுகளும் இந்தியில்தான் என்று சொல்வதன் மூலமாக, இந்தி பேசும் மாநில மக்களுக்கு மட்டும்தான் இனி அனைத்திந்திய பணி இடங்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டார்கள்.
தற்போதைய நிலையில், அறிவியல் வளர்ச்சியையும் தொழில்நுட்ப வசதிகளையும் கவனத்தில் கொண்டு, எட்டா வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இந்திக்கு இணையான அலுவல் மொழி யாக்குவதே ஒன்றிய அரசின் நோக்கமாக இருக்க வேண் டும். அதை விட்டுவிட்டு, ஆங்கிலத்தையும் நீக்கிவிட்டு, இந்தியை மட்டும் வைப்பது அரசியல் சட்டத்தை மதிக்காத தன்மையாகும்.
இருமொழிக்கொள்கை
தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை என்பது, தமிழும், ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கை! தமிழ் மொழி இந்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஏற்கப்பட வேண்டும். மாநில ஆட்சி மொழிகள் அனைத்தும் இந்திய அரசின் ஆட்சிமொழியாக ஆக வேண்டும். இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி எந்த வகையிலும் திணிக்கப்படக் கூடாது. இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இந்தி தெரிந்தவர்க ளுக்கு மட்டுமே சாதகமான வழிவகைகள் செய்யப்படக் கூடாது. அது நம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான தாக அமைந்துவிடும். தமிழகத்தில் இயங்கும் ஒன்றிய அரசின் அலுவலகங்க ளில் இணை அலுவல் மொழியாக தமிழை அங்கீகரித்து, அனைத்து அலுவலகச் செயல்பாடுகளும் தமிழிலேயே இயங்க உரிய சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை ஆக்க வேண்டும். இவைதான் நமது மொழிக் கொள்கை. இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிக ளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப் பாட்டுக்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது.
தமிழக சட்டப்பேரவையில் செவ்வாயன்று (அக்.18) இந்தித் திணிப்புக்கு எதிராக அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை