tamilnadu

img

வண்ணக்கதிர் 4

கோபுவும் பாபுவும்  பெரணமல்லூர் சேகரன்

ஒரு நாள் அரச மரத்தடியில் கோபுவும் அவனது தம்பி பாபுவும் சண்டை போட்டுக் கொண்டிருத்தனர். கோபு வைத்திருந்த கேக்கை பாபுவுக்குத் தராமல் அவன் மட்டுமே சாப்பிட விரும்பியதால் வந்த சண்டை அது. அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த பாட்டி ஒருத்தி கோபுவின் அருகில் சென்றாள். அவர்கள் இருவருக்குமே தெரிந்த பாட்டிதான் அவள்.  “கோபு, என்ன பாபுவிடம் சண்டை போட்டுக்கிட்டிருக்க” என்றாள். “பாட்டி, என்னோட கிளாஸ்ல படிக்கிற பையன் ரவியோட பிறந்த நாளுக்காக அவன் எல்லோருக்கும் கேக் கொடுத்தான். எனக்கும் கேக் கொடுத்தான். இது எனக்குத் தானே சொந்தம். வீட்டுக்கு வந்து விளையாடும்போது பொறுமையா சாப்பிடலாம்னு இருந்தேன். இப்ப என்னோட கேக்க, கேட்டு பாபு அடம் பண்றான் பாட்டி” என்றபடி பாபுவை முறைத்தான் கோபு. “பாட்டி, கேக்க நான் முழுசா கேக்கல. கொஞ்சம்தான் கேக்கறேன். ஆனா அண்ணன் கொடுக்க மாட்டேங்கிறான்.” என்று சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான் பாபு. “கோபு, உனக்கு பாபு தம்பிதான. நீதான அவன நல்லபடியா பார்த்துக்கணும். அவன் ஒன்னும் முழு கேக்கயும் குடுன்னு கேக்கலயே. கொஞ்சம்தான கேக்குறான்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே,”இது எனக்குத்தானே சொந்தம் பாட்டி. எனக்குக் கிளாஸ்ல கொடுத்ததுதான பாட்டி” என்றான் கோபு. “பாபுவும்தான் உன் பள்ளிக்கூடத்துல படிக்கிறான். வகுப்புதான்‌ வேற. நாளைக்கே அவன் வகுப்புல யாருக்காவது பொறந்தநாள்னு ஏதாவது கொடுத்தா வீட்டுக்கு வந்து அவன் சாப்பிடும்போது நீ கேக்காமலா இருப்ப”என்று பாட்டி சொன்னபோது, அமைதியாக இருந்தான் கோபு. “எனக்கு யாராச்சும் எதாச்சும் கொடுத்தா, நான் கொஞ்சம் அண்ணாவுக்குக் கொடுக்கிறேன்‌ பாட்டி” என்றான் பாபு. சிரித்துக் கொண்டே பாட்டி,”பார்த்தியா கோபு, உன் தம்பி உம்மேல பாசமா இருக்கான். நீயும் அப்படித்தானே இருக்கணும்”என்று பாட்டி சொல்லவும் தலையசைத்தான் கோபு. “உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏதாவது யாராவது கொடுத்தாக்கா அவங்க சாப்பிட மாட்டாங்க. உங்களுக்குக் கொடுத்த பிறகுதான், மீதி இருந்தா அவங்க சாப்பிடுவாங்க. நீ பெரியவன். பாபு சின்னவன். நீதான் பாபுவ அன்பா பார்த்துக்கணும். எதுவாக இருந்தாலும் ரெண்டு பேரும் பகிர்ந்துக்கணும். சரியா” என்றாள் பாட்டி. இப்போது இருவரும் பலமாக தலையசைத்தனர். கோபு பாதி கேக்கைப் பிட்டு பாபுவுக்குக் கொடுத்தான். இருவரையும் அரச மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடச் சொன்னாள் பாட்டி. இருவரும் அரச மரத்தடியில் அமர்ந்து கேக்கைச் சுவைத்துச் சாப்பிட்டனர். இருவர் முகமும் மகிழ்ச்சியானது. பாட்டி தனக்குள் சிரித்துக் கொண்டே கடந்து சென்றாள்.'

சின்னமணல்மேடு த.இராமலிங்கம்

கண்ணே  மணியே பாப்பா கனிச்சொல் உனது செல்வம் எண்ணம் போல வாழ்வாய் இதுதான் வாழ்வின் தொடக்கம்  ஏழைக் கிரங்க வேண்டும் எளியோர் எல்லாம் உறவு கோழை மனது வேண்டாம் கொடுமை கண்டால் பொங்கு.  தன்னல மேபெருங் குற்றம்  தவறியும் மனத்தது வேண்டாம் மண்ணலம் ஒன்றே தேவை மகிழ்ச்சி மக்கள் சேவை.  நெஞ்சின் அமுதம் அன்பு நேர்மை தாய்ப்பால் ஆகும் கெஞ்சும் வாழ்க்கை தீது கேடர் நட்பு வேண்டாம்  உன்னை நீயும் நம்பு உறுதி உனக்குத் தெம்பு கண்ணைப் போல மொழியைக் காத்தல் உன்றன் கடமை.  வஞ்சகர் நட்புத் தீங்கு வாழ்வில் அவரை நீங்கு அஞ்சா நெஞ்சே வலிமை அதைவிட வலிமை எளிமை  நல்லோர் நட்பைப் போற்று நாடும் மொழியும் தாயாம் உள்ளத் திலேயிதைப்  பூட்டு உயர்வை இங்குக்  காட்டு.