tamilnadu

img

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1020 காளைகள் பங்கேற்பு

அலங்காநல்லுார், ஜன.17- மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்றது எனக் கூறப்படும் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு திங்கள் காலை  6.50 மணிக்குத்  துவங்கி மாலை ஐந்து மணிக்கு நிறைவு பெற்றது.  இதில் 300 மாடுபிடிவீரர்கள் கலந்து கொண்டனர். 1020 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 700 காளைகள் மட்டுமே அவிழ்த்துவிடப்படும் என  எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல்முறையாக 1020 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மாடுகளை பிடித்த வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், ஏர்கூலர், தங்கக்காசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பெரும்பா லானவர்களுக்கு தங்கக்காசுகளே பரிசளிக்கப்பட்டன. சிலர் ரொக்கப்பரி சையும் பெற்றுச் சென்றனர். சிறந்த மாடுபிடி வீரராக மதுரை கருப்பாயி ஊரணியைச் சேர்ந்த கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். இவர் 21 காளைகளை அடக்கியுள்ளார். இரண்டாவது பரிசை அலங்கா நல்லூரைச் சேர்ந்த ராம்குமார் பெற்றார். அவர் 19 காளைகளை அடக்கி யுள்ளார். மூன்றாவது பரிசை சமய நல்லூரை அடுத்த சித்தாலங்குடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் பெற்றார். இவர் 13 காளைகளை அடக்கியுள்ளார். சிறந்த காளைக்கான பரிசை புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி யைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் காளை தட்டிச் சென்றது.

ஜல்லிக்கட்டு போட்டியில் டிஐஜி பொன்னி, காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்,  தலைமையில் 2,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக காலையில் போட்டியை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்டேசன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெறும். சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பாகவும், சிறந்த மாடுபிடி வீரருக்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி சார்பாகவும் கார்கள் வழங்கப்பட்டன. படங்கள்

: ஜெ.பொன்மாறன்