tamilnadu

img

சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்  வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

பெரம்பலூர், ஏப்.22-  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேதமடைந்த மக்காச் சோளம், நெல் பயிர்களுக்கு நிவாரணம் கோரி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் என். செல்லதுரை தலைமை வகித்து பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 11-ஆம் தேதி பலத்த காற்றுடன் பரவலாக கோடை மழை பெய்தது. அப்போது, பலத்த சூறாவளி காற்றின் காரணமாக வேப்பந்தட்டை வட்டாரத்தில் உள்ள பசும்பலூர், வெள்ளுவாடி, பிம்பலூர், கை.களத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இறவை பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிர்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்தன. இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை, எள், நெல் மற்றும் பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பலத்த காற்றால் சேதமடைந்ததுள்ளதை வருவாய்த் துறையினரால் கணக்கெடுத்து, சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில், சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரண வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.