புதிதாக தரமாக வேளாண்மை விரிவாக்க மையம் கட்ட விவசாயிகள் கோரிக்கை
பாபநாசம், மே 31- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் மெயின் சாலையின் நடுவில் போக்குவரத்திற்கு இடையூறாக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி உள்ளது. இது மக்களின் பயன்பாட்டில் இல்லை. அதற்கு மாற்றாக, அதன் அருகிலேயே புதிதாக நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்த பின்னாலும், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இடித்து அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. மேலும், சாலையோரம் வேளாண்மை விரிவாக்க மையம் பழுதடைந்த நிலையில், பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதில் மரக் கன்றுகள் வளரத் தொடங்கி விட்டன. இந்த கட்டடத்தையும் இடித்து அப்புறப்படுத்துவதுடன், புதிதாக தரமாக வேளாண்மை விரிவாக்க மையம் கட்ட அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும், அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கணபதி அக்ரஹாரம் காவிரி பாலம் புதிதாக கட்டப்பட்டும், அதில் மின்விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள் நடக்க வாய்ப்பிருப்பதால் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். கணபதி அக்ரஹாரம் மஹா கணபதி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால் மெயின் சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்றனர்.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.29 லட்சம் மோசடி: ஒருவர் கைது
தஞ்சாவூர், மே 31- தஞ்சாவூர் அருளானந்தம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் விக்னேஷ்வர். இவர், அரசுப் பணிக்காக முயற்சிகள் செய்து வந்தார். இந்நிலையில் நண்பர்கள் மூலம் கடந்த 2022 ஆம் ஆண்டு, இவருக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம் நகர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்ய நாராயணன்(59) ஆகிய இருவரும் அறிமுகமாகி உள்ளனர். விக்னேஸ்வர் அரசுப்பணியில் சேர முயற்சிகள் மேற்கொள்வதை அறிந்த ரவிச்சந்திரன், சத்யநாராயணன் இருவரும், “எங்களுக்கு அரசு தேர்வாணையத்தில் உயர் அலுவலர்களை தெரியும். உங்களுக்கு அரசுப் பணி வாங்கித் தருகிறோம்” என தெரிவித்துள்ளனர். இதற்காக விக்னேஸ்வரிடமிருந்து ரூ.29 லட்சத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜுன் மாதம் வரை பல தவணைகளில் வாங்கி உள்ளனர். ஆனால், அரசுப் பணி வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து விக்னேஷ்வர் பலமுறை இருவரிடமும் கேட்டு முறையான பதில் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விக்னேஷ்வர் புகார் செய்தார். இதன் பேரில், ஆய்வாளர் கலைவாணி மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் விக்னேஸ்வரிடமிருந்து ரவிச்சந்திரன், சத்யநாராயணன் இருவரும் பணம் பெற்றது உண்மை என தெரிய வந்தது. தொடர்ந்து சென்னை ராமாபுரத்தை சேர்ந்த சத்யநாராயணனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர்.
ஒரே நாளில் 8,144 அரசு ஊழியர்கள் பணி ஓய்வு
சென்னை, மே 31 - தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த 8,144 பேர், ஒரே நாளில் சனிக்கிழமையன்று (மே 31) பணி ஓய்வு பெற்றனர். இந்தாண்டில் ஒரே மாதத்தில் இவ்வளவு பேர் பணி ஓய்வு பெறுவது இதுவே முதல் முறையாகும் என்றும், ஒரு நாளில் பணி ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் எண்ணிக்கையில் இதுவே மிக அதிக எண்ணிக்கையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இறுதியில் (மே.31) ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் மே 31 நிலவரப்படி 9.42 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7.33 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தற்போது மாநில அரசு ஊழியர்களின் பணி ஓய்வுபெறும் வயது 60. பொதுவாக, தமிழக அரசு ஊழியர்கள் தாங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில்தான் பணி ஓய்வு பெறுவார்கள். எனவே தான் மே மாதங்களில் அதிகம் பேர் பணி ஓய்வு பெறுவது இத்தனை காலமாக வழக்கத்தில் இருந்துள்ளது. இதற்குக் காரணம் என்னவென்றால், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்த கல்வியாண்டு முடிவு பெறும்போது அதாவது மே மாதங்களில்தான் பணி ஓய்வு பெறுவார்கள் என்பதால், ஏராளமான ஆசிரியர்கள் சனிக்கிழமையுடன் (மே 31)பணி ஓய்வு பெறுவதால்தான், ஒரே நாளில் சுமார் 8,144 பேர் பணி ஓய்வுபெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைத்து தந்த முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி
திருச்சிராப்பள்ளி, மே 31- திருச்சிராப்பள்ளி மாநகரில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்திடும் வகையிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையிலும், பஞ்சப்பூரில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பேருந்து முனையம் அமைத்திட முதல்வர் கடந்த 30.12.2021 அன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நிகராக அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப்பெரிய பேருந்து முனையமாக 38 ஏக்கர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து முனையம் மே 9 ஆம் தேதி முதல்வரால் திறக்கப்பட்டது. இதில், தரைத்தளத்தில் 124 பேருந்துகள், நீண்ட நேர நிறுத்த பேருந்துகள் 141, குறைந்த நேர நிறுத்த பேருந்துகள் 80 என 345 வெளியூர் பேருந்துகளும், முதல் தளத்தில் 56 உள்ளூர் நகரப் பேருந்துகளும் என மொத்தம் 401 பேருந்துகள் ஒரே சமயத்தில் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக பேருந்து முனையத்தின் தரைதளம் முற்றிலும் குளிரூட்டும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. காற்றுமாசினை கட்டுப்படுத்தி குளிர்ந்த சூழலை ஏற்படுத்தும் வகையில், பேருந்து முனையத்தைச் சுற்றிலும் பசுமை அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்து முனையம் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு வருகை தந்த பொதுமக்கள், முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்து வருகின்றனர்.
பந்தல் போட்டு திருமணம் செய்த தலித் மக்கள் மீது தாக்குதல்: இருவர் காயம்; ஒருவர் கைது
திருச்சிராப்பள்ளி, மே 31- திருச்சி புறநகர் மாவட்டம் முசிறி அருகே உள்ள எம். புதுப்பட்டி கிராமம் அம்மன் நகரில் வசித்து வருபவர் செந்தில்குமார். விவசாயத் தொழிலாளி இந்து அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருடைய அண்ணன் ரவிச்சந்திரன் மகள் மம்தா என்பவருக்கும், பெருமாள் பாளையத்தைச் சேர்ந்த ஜீவா என்பவருக்கும் கடந்த 28 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதற்காக கடந்த 27 ஆம் தேதி அம்மன் நகரில் பந்தல் அமைக்கும் பணியில் செந்தில்குமார் ஈடுபட்டிருந் தார். அப்போது பக்கத்து தெருவில் வசிக்கும் மதியழகன் மகன் வேந்தன் என்பவர், அங்கு வந்து வீதியில் பந்தல் போடக்கூடாது என்று செந்தில் குமாரை மிரட்டி உள்ளார். இதனை கண்டு கொள்ளாமல் செந்தில்குமார் பந்தல் அமைத்தார். மருத்துவமனையில் அனுமதி இதையடுத்து கடந்த 28 ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில் 29 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் செந்தில்குமாரையும் அவரது மகளை யும், வேந்தன் ஜாதி பெயரைச் சொல்லி, இழிவாக, தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். வேந்தன் ஏற்கனவே அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சிலரை குறி வைத்து வம்புக்கு இழுத்து தாக்கி அப்பகுதியில் ரவுடித்தனம் செய்து வந்துள்ளார். இவருக்கு பயந்து யாரும் இதுவரை காவல் நிலையத் தில் புகார் கொடுக்க முன்வரவில்லை. காவல்நிலையத்தில் காத்திருப்பு இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புறநகர் மாவட்டச் செயலாளர் ரஜினிகாந்த், சிபிஎம் ஒன்றிய செயலாளர் அசோக், முன்னாள் ஒன்றியச் செயலாளர் டி.பி. நல்லுசாமி, மூத்த தோழர் சுப்பிரமணி, தர்மலிங்கம் ஆகியோர் செந்தில்குமார் மற்றும் அவரது மகளை சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்று சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர், பொதுமக்களை திரட்டி முசிறி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர். வேந்தன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக்கூறி காவல் நிலையத்திலேயே காத்திருந்தனர். ஒருவர் கைது இதையடுத்து, காவல்துறையினர், மாலை 3 மணி அளவில் வேந்தனை கைது செய்தனர். அவர் மீது குற்றவி யல் சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.