tamilnadu

img

கடலூரில் போட்டி மாநகராட்சி அலுவலகம்? லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் அம்பலம்

கடலூர், மார்ச் 16- கடலூர் மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ. 5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மாநகராட்சி அலுவலகத்திற்கு இணையாக தனியார் அலுவலகம் செயல்பட்டதும் தெரியவந்தது. கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுவதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் வரைபட அனுமதி பெற வேண்டும். கடந்த சில மாதங்களாக வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக வரைபட அனுமதி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  மாறாக, புதுப்பாளையம், கோண்டூர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் மூலம் அனுமதி அளிப்பதாகவும், அதற்கு கட்டிடங்களின் பரப்பளவுக்கு ஏற்றவாறு பொதுமக்களிடம் அதிக அளவு லஞ்சம் பெற்று, அதை மறைமுகமாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பலர் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்ட முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுகுறித்து பொதுமக்கள், லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்

தேவநாதன் தலைமையில் காவல் துறையினரின் 5 குழுக்களாக பிரிந்து கடலூர் மாநகராட்சி அலுவலகம், புதுப்பாளையத்திலுள்ள பங்கஜம் கன்ஸ்ட்ரக்சன், கோண்டூர் மற்றும் கான்வென்ட் சாலையிலுள்ள பங்கஜம் கன்ஸ்ட்ரக்சன் கிளை நிறுவனங்கள், பாரதி சாலையிலுள்ள ஆல்பா கன்ஸ்ட்ரக்சன் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். புதனன்று (மார்ச் 15) மதியம் 3 மணிக்கு இந்த தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடைபெற்றது. இதில் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுமானம் தொடர்பான கோப்புகள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் தனியார் கட்டுமான இடத்தில் நகர அமைப்பு அலுவலகத்திற்கு இணையான அலுவலகம் 15 ஊழியர்களைக் கொண்டு செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து ரூ.5 லட்சம் பணத்தையும், அதிகாரிகள் அதனை யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அதில் மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் பெயரும் இருந்தது குறிப்பிடத்தக்கது. சோதனை முடிவில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்.