பெரணமல்லூர் சேகரன் 1921 ஆம் ஆண்டு மதுவிலக்கு திட்டத்தை எவ்வாறு அமுல்படுத்துவது என்பதைக் கலந்துரையாடி முடிவு செய்யக் காந்தியடிகள் தேர்ந்தெடுத்த ஊர் ஈரோடுதான்.இந்தியத் துணைக் கண்டமே ஈரோடு நகரம் நோக்கித் தன் வழிகளை அகலத் திறந்து பார்த்து நின்றது. இந்திய தேசிய காங்கிரசின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படத் தக்க புகழ் மிக்க அந்தப் போரின் தளநாயகர் பெரியார் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்வதோடு நின்றுவிடமுடியாது. காரணம் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும் அன்பு உடன்பிறப்பாம் கண்ணம்மாளும் பெரும் வீராங்கனைகளாய் உயர்ந்தோங்கி நின்று களம் கண்டு வாகை சூடினர். ஈரோட்டில் 144 தடையுத்தரவு நடைமுறைக்குக்கொண்டு வரப்பட்டது.
தாம் பிறந்து வளர்ந்து பெருமகனாய் விளங்கி எந்நேரமும் அந்நகரத்துக்காகவே பாடுபட்டுப் புகழீட்டிய அதே மண்ணில், தமது மண்ணின் மைந்தர்கள் தென்னங்கள் உண்டு அதனால் பெருந்துயரம் எய்தி வரும் அக்காலகட்டத்தில் அதற்கொரு முடிவு கட்ட பெரியார் முன் வந்தார். அதன் விளைவாக மறியல் களம் கண்டு சிறையேகினார் பெரியார். தமிழ் நாடெங்கும் ஆண்களும் பெண்களுமென பல்லாயிரக் கணக்கில் அணிவகுத்தனர். நாகம்மையாரும் கண்ணம்மாளும் போராட்டத்துக்குத் தலைமையேற்று வீரகாவியம் படைத்தனர். சிறைகள் நிரம்பி வழிய வேறு வழியின்றி 144 தடையுத்தரவைத் தவிர்த்திட, அரசு முன் வந்தது. இரு பெண்மணிகளின் புகழ் இந்தியா முழுவதும் பரவி எதிரொலித்தது.
1922ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் நாளிட்ட ‘இந்து’ பத்திரிகையில் இப் பேருண்மை வெளியாகி உரம் சேர்த்தது. காந்தியடிகளின் ஒத்துழையாமை கிளர்ச்சிகளை நிறுத்திக் கொள்ளுமாறு சமாதானப் பேச்சுவார்த்தைகள் பம்பாயில் நடைபெற்றன. அரசு ஒப்பந்தம் செய்து கொள்ள முன் வந்ததால் பண்டித மாளவியா, சர். சங்கரன் நாயர் ஆகிய இருவரின் முயற்சியால் ஒரு மாநாடு கூட்டப் பெற்றது. அதில் அவர்களிருவரும் கள்ளுக்கடை மறியலை நிறுத்தி விடுங்கள்; வேறு நடவடிக்கை துவக்கலாம் என்று கேட்டபோது, காந்தியடிகள், மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை; அது ஈரோட்டிலுள்ள இரு பெண்மணிகளிடம் உள்ளது; அவர்களைத்தான் கேட்க வேண்டும் என்று பெருமிதத்துடன் பதிலுரைத்தார். பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாளும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதலிடம் பெற்றிருந்தார்கள் என்பதும், முதன்முதலில் காங்கிரஸ் இயக்கத்திற்காகச் சிறையேகத் துணிந்தவர்கள் அவர்களே என்பது வரலாறானது. மிகப் பெரும் சவாலாக உயர்ந்து நிற்கும் மதுவெனும் அரக்கனை அழிக்க பாலின வேறுபாடின்றி போராடி அழிக்க வேண்டியது காலத்தின் அவசியம்.