காலமுறை ஊதியமே ஊழியர்களின் கோரிக்கை
சத்துணவு ஊழியர் மாநாட்டில் தலைவர்கள் உரிமைக் குரல்
திண்டுக்கல், மே 25- சத்துணவு துறையில் நிரப்பப்படாமல் உள்ள 62,000 பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மாதர் சங்க மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி வலியுறுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாட்டில் நிறைவுரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். பெண் ஊழியர்களுக்கு அநீதி மகப்பேறு விடுப்பில் கொடும் பாரபட்சம்: மிகக் குறைந்த ஊதியத்தில் பணிசெய்யும் பெண்களிடம் கடுமையான உழைப்புச் சுரண்டல் நடைபெறுவதாக பாலபாரதி கண்டனம் தெரிவித்தார். அரசு பெண் ஊழியர்களுக்கு 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. ஆனால் சத்துணவு துறையில் பணிபுரியும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு வெறும் 6 மாதம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஊதிய வேறுபாட்டின் வேதனை: சிறப்பு காலமுறை ஊதியத்தை நிறுத்திவிட்டு காலமுறை ஊதியம் கோரியுள்ள நிலையில், அரசு இருவருக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பதில் உழைப்புச் சுரண்டல் இருப்பதாக சுட்டிக்காட்டினார். அதிர்ச்சிகரமான பணியாளர் பற்றாக்குறை 63,000 காலிப் பணியிடங்கள் - பெரும் அதிர்ச்சி: ஒரு சத்துணவு ஊழியர் தான் 12 மையங்களைப் பார்வையிடுவதாக சொன்னார். ஆனால் இந்தத் துறையில் 62 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளது என்பது மிகப் பெரிய அதிர்ச்சிகரமான செய்தி என பாலபாரதி தெரிவித்தார். எதிர்காலத் திட்டங்களும் தற்போதைய நிலையும்: அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட இத்திட்டம் திமுக காலத்தில் வளர்ந்து, காலை சத்துணவாக மலர்ந்துள்ளது. எதிர்காலத்தில் இரவு நேர உணவாகவும் விரிவடையலாம். இப்படி ஒரு நாளில் இரண்டு வேளை உணவு வழங்கும் திட்டத்தில் 62,000 பணியிடங்களில் ஆட்கள் இல்லாமல் எப்படி செயல்படும் என்று கேள்வி எழுப்பினார். காலை சத்துணவு ஊழியர்களின் அவல நிலை “காலை உணவுத் திட்டத்தில் அரிசி உப்புமா, ரவை உப்புமா, கேழ்வரகு உப்புமா என எல்லா உப்புமாவும் போடுகிறார்கள். ஆனால் காலை சத்துணவு ஊழியர்களின் வாழ்க்கை உப்புமா - அடுப்படியிலும் இல்லாமல், தெருவிலும் இல்லாமல் உள்ளது” என்று பாலபாரதி உருக்கமாகத் தெரிவித்தார். காலை சத்துணவு ஊழியர்களை முக்கிய சத்துணவு ஊழியர்களுடன் இணைக்க வேண்டும் என்றும் கோரினார். முன்பைவிட வலிமையான போராட்டங்கள் அவசியம் - மு.பாஸ்கரன் எச்சரிக்கை முன்னதாக சனிக்கிழமை மாநாட்டைத் துவக்கி வைத்து பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன், நீடித்த பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக பின்னுக்குத் தள்ளப்படுவதாக கவலை தெரிவித்தார். 40 ஆண்டுகால போராட்டம் - இன்னும் நிறைவேறாத கனவு “ஆட்சியாளர்கள் பல்வேறு உத்தரவாதங்கள் கொடுத்தாலும், கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தினாலும் காலமுறை ஊதியம் என்ற அடிப்படைக் கோரிக்கையை எட்ட முடியவில்லை. இது உண்மையிலேயே வேதனையான விஷயம்” என்று பாஸ்கரன் தெரிவித்தார். சங்க வரலாற்றின் முக்கியத்துவம்: தொகுப்பு ஊதியத்திலிருந்து சிறப்பு காலமுறை ஊதியம் என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது சத்துணவு ஊழியர் சங்கம் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்று நினைவூட்டினார். இரட்டிப்பு வேலைச்சுமையின் கொடுமை 50% காலிப் பணியிடங்கள்: கடந்த டிசம்பர் மாத அரசாணையிலேயே 42% காலிப் பணியிடங்கள் இருப்பதாக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. நடைமுறையில் கிட்டத்தட்ட 50% காலிப் பணியிடங்கள் இருக்கும்போது, ஒவ்வொருவரும் இருவர் செய்யக்கூடிய பணியைச் செய்கின்றனர். 8% தொடர் வளர்ச்சியும் புறக்கணிக்கப்படும் உரிமைகளும்: தமிழ்நாடு கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக 8% அல்லது அதற்கு மேலான பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. மத்திய அரசும் 9% வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் பொருளாதார வளர்ச்சி சீராக இருந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினைகள் வரும்போதெல்லாம் பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டி கோரிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளுவதாக விமர்சித்தார். ஏஐ தொழில்நுட்பத்தின் அச்சுறுத்தல்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித உழைப்பைக் குறைக்கும் நிலை உருவாகி வருகிறது. மருத்துவத் துறையிலும் ரோபோக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் காலம் வந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் பெற்ற சலுகைகளைப் பாதுகாக்கவும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்காகப் போராடவும் வேண்டும். எதிர்காலத் திட்டமிடல்: “தமிழகத்தின் அக மற்றும் புறச் சூழல்களை உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப போராட்டங்களைத் திட்டமிட வேண்டும்” என்றும் பாஸ்கரன் அழைப்பு விடுத்தார்.