வாசிப்பை வளர்க்க பல நூதன வழிகள் இன்று பின்பற்றப்படுகின்றன. ஆனால் இவற்றில் இருந்தெல்லாம் முற்றிலும் வித்தியாசமான ஒரு திட்டத்துடன் கேரளா கோட்டயம் மாவட்டம் பள்ளிகத்தோடு (Pallickthodu) பகுதி ஆனிப்பாடு கொம்பாறா கூட்டமாக்கல் செயிண்ட் ஆண்டனீஸ் தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகின்றனர். “பஸ் வர இன்னமும் நேரமிருக்கிறதே. ஒரு புத்தகம் வாசிக்கலாம்”என்பதே அதன் பெயர். இப்பகுதியில் இருக்கும் மந்திரம் முக்காலி சாலையில் இளக்குங்கல்லில் கிராமப் பஞ்சாயத்தில் பஸ் ஸ்டாப்புக்கு வருபவர்களுக்கு வித்தியாசமான ஒரு புதிய விஷயம் காத்திருக்கிறது. பஸ்ஸிற்காகக் காத்திருக்கும் நேரத்தில் ஏற்படும் சோர்வை அகற்ற, அந்தப் பொழுதையும் பயனுடைய விதத்தில் செலவிட அங்கே ஒரு திறந்தவெளி வாசகர் சாலை செயல்படுகிறது.
பஸ் நிறுத்தத்திற்கு அருகில் இருக்கும் இடத்தில் செயல்படும் இந்த வாசகர் சாலையில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை யார் வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். இங்கே வைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் பட்டியலை மாணவர்கள் தயாரித்து பஸ் நிறுத்தத்தின் சுவரில் ஒட்டி வைத்திருக்கிறார்கள். வாசித்த பிறகு படித்த புத்தகத்தைப் பற்றி கருத்து தெரிவிக்க அருகிலேயே ஒரு நோட்டுப்புத்தகமும் வைக்கப்பட்டிருக்கிறது. விஞ்ஞான நூல்கள், கதைகள், நாவல்கள், வயது முதிர்ந்தவர்களுக்கான சிறப்புப் நூல்கள் உட்பட பல தலைப்புகளில் புத்தகங்கள் இங்கு உள்ளன. ஒவ்வொரு மாதமும் இருபது புத்தகங்கள் இங்கு வாசிப்பதற்காக வைக்கப்படும். அடுத்த மாதம் இவை எடுக்கப்பட்டு வேறு புதிய இருபது புத்தகங்கள் வைக்கப்படுகின்றன. புத்தகங்களை ஏராளமானோர் வாசிக்கின்றனர். சிலர் தங்கள் சொந்த புத்தகங்களை இங்கு கொண்டு வந்து மற்றவர்கள் வாசிக்க வைக்கிறார்கள். மாதக் கடைசியில் புத்தகங்களை எடுத்துவைக்க வரும்போதுதான் அங்கு புதிய புத்தகங்கள் வந்திருக்கின்ற விவரத்தை மாணவர்கள் தெரிந்துகொள்கின்றனர். இது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று இதைச் சமூக ஆர்வலர்களும், அதிகாரிகளும் பாராட்டுகின்றனர். மனமிருந்தால் நல்லது எதையும் செய்யலாம் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.