tamilnadu

மலம் குடிப்பதோ... நம் மக்கள்?

வேங்கை வயல் இறையூரில் ஆதிக்க சாதி வெறியர்களால் நிகழ்த்தப்பட்ட கொடூரத்திற்கு எதிராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சேலம் மாவட்ட குழு சார்பில் 19.02.2023 அன்று அன்று நடத்தப்பட்ட கவியரங்க நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதை.

மௌட்டியங்கள்
பூசப்பட்ட
எங்களின்
காலச்சக்கரம்...
அதிகாரச் சிலுவையில்
சிக்குண்டதோடு மட்டுமல்லா...
பதியமிடப்பட்டு வரும்
வஞ்சனைகளால்
துருக்களேறிக் கிடக்கின்றது...!
மௌனம் புதைந்த
பீக்குழியின் பிரவாகத்தில்...
பிடித்துத் தள்ளப்படும்
எங்களின் தலைகளில் தேங்கும்
பீக் கிரீடங்களின்
சுமையை 
உணர முடியுமா உங்களால்...?
தெறித்து விழும் பீத் துகள்கள்
எங்களின் விழிகளையும்
சேர்த்தான நவ துவாரங்களையும்
மூச்சடைக்கச் செய்திருப்பதை
எங்கள் ‘உயிர்ச் சுழியம்’ அறியும்...!
ஆனாலும் கூட...
எங்களின் உடலில்
முளைத்திருக்கும்
பீச் செதில்களை உதிர்த்துவிட்டுத்தான்
மேடேறி இருக்கிறோம்...
இல்லையில்லை...
இதெல்லாம் போதாது
உங்களுக்கென்று...
உயிர்த் தண்ணீரிலும்
பீ அள்ளி கலந்து
சமைத்துத் தருகிறீர்கள்...!
எங்களின் குருதியில்
தாகம் அடைந்;த பொழுதுகளை
ஈடாக்க வேண்டி...
குவளை நீரிலும் கூட
பீக் கலந்து பரிமாறுகிறீர்கள்...!
“பீச்சாங் கைய்யில
ஆளுவளுக்கு
தண்ணி கிண்ணி குடுக்காத...”
பலி பாவஞ் சேருமென்பாள்
என் வீட்டு வேலாயி கிழவி
பருகும் தண்ணீரில்
பீக் கலந்து போவீரென...
பாவியவள் அறிந்திருக்க
நியாயமில்லை...!
எங்களின் வலிகள்
பீயின் மஞ்சள் நிறச் சொற்களால்
நிரப்பப்பட்டவைகளல்ல...
செங்குருதியின்
சிவப்பு நிறச் சொற்களால்
பூரணமாக்கப்பட்டவை...!
விழிகளற்ற எங்களின் குரல்கள்
பீயடைத்த உங்களின்
பொதுப் புத்திக்கு கேட்குமெனில்...
பீப் பேளும் பொழுதுகளில்
பீயோடு சேர்த்து உங்களின்
நாராசரமான அகந்தையையும்
முக்கித் தள்ளி
பீக் குழியை நிரப்பிவிட்டு...
மனிதத்தை போர்த்திக்கொண்டு
வடிவமாகி விடுங்கள்...!
இல்லாமற் போகக்கூடுமெனில்...
வன்மம் பூசப்பட்ட
உங்களின் ஆறாம் அறிவில்
ஓட்டியிருக்கும் பீத் துகள்களை
மறைக்க வேண்டி...
மனிதச் சமனற்றுப் போவீர்கள்...!
உங்களின்
பூஞ்சையேறிய செந்நிறக் குருதியில்
சம்மணமிட்டுக் கொண்டு
உட்கார்ந்திருக்கும்
பீத் தேங்கல்களை
வழித்தெறிந்துவிட்டு...
மனிதத்தை பூசிக்கொள்ளுங்கள்...!
பீ நாற்றமடிக்கும்
உங்களின் படிமத்தை...
மாற்றிக் கொள்ள அப்படியும்
முடியாமற் போனால்...
ஒரு முறை நாவினால்
துழாவித்தான் பாருங்களேன்...!
எங்களின் பீயும்
மணமும்... சுவையும்...
நிறைந்தவையே...!
ஆம்... எங்களின்
பீயும்
மணமும்... சுவையும்...
நிறைந்தவையே...!
- புஷ்பவல்லி ராதாகிருஷ்ணன்
(பட்டாம்பூச்சி )