கோயமுத்தூர்/சென்னை, ஜன.11- பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி-யிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மனு அளித்தனர். சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான பெ.சண்முகம் தலைமையில் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகைமாலி, எம்.சின்னதுரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டச் செயலாளர் வி.பழனிச்சாமி ஆகியோர் சென்னையில் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு விவசாயிகள் 925 ஏக்கர் நிலத்தை 1980 ஆம் ஆண்டில் வழங்கினர்.
ஆனால், நாற்பது ஆண்டுகள் கடந்த பிறகும் அந்த நிலத்திற்கான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதில் நிலத்தின் உரிமையாளர்கள் பலர் இறந்தும் விட்டனர். கடந்த காலத்தில் இதற்காக சிபிஎம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பலமுறை போராட்டங்கள், முற்றுகை, அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 400 கோடி ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் சிபிஎம் தலைவர்கள் இதுகுறித்த விவரங்களை எடுத்துரைத்தனர். இதனை கேட்டறிந்த அமைச்சர் கோரிக்கை மனுவில் உள்ள விபரங்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என க.பொன்முடி உறுதியளித்தார்.