tamilnadu

img

கரூர் மாவட்டத்தின் அடையாளம் தோழர் ரத்தினவேலு

கரூர் மாவட்டத்தின் அடையாளம் தோழர் ரத்தினவேலு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினரும், ஒன்றுபட்ட திருச்சி மற்றும் கரூர் மாவட்ட முன்னாள் செயலாளருமான 90 வயது நிரம்பிய தோழர் ஜி. ரத்தினவேலு, கரூர் மண்ணின் உழைப்பாளி மக்களின் அடையாளம். கரூர் மில்ஸ் நூற்பாலையில் தொழிலாளியாக வாழ்க்கையை துவங்கிய தோழர் ஜி. ரத்தினவேலு, கட்சி முடிவின்படி, 1980 இல் தனது கரூர் மில்ஸ் வேலையை ராஜினாமா செய்தார்.  கரூர் மாவட்டத்தில் எண்ணற்ற போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார். குறிப்பாக கரூர் மில்ஸ் முதலாளியின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம், கூட்டுறவு நூற்பாலை, திருவளர் மில்ஸ் போராட்டம், புகளூர் சர்க்கரை ஆலை போராட்டம் மற்றும் எல்.ஜி.பி  தொழிலாளர்களின் போராட்டம் ஆகியவற்றை தலைமை ஏற்று நடத்தியவர். எல்.ஜி.பி. போராட்டத்தின் போது அன்றைய காவல்துறை அதிகாரி தேவாரத்தின் பூட்ஸ் காலால் உதை வாங்கி, அதை உறுதியாக எதிர்த்து போராடி சிறப்பு பெற்றவர். போராட்டங்களில் பங்கேற்று, பலமுறை சிறை சென்றவர். ஒன்றுபட்ட திருச்சி மாவட்டத்தின் தொழிற்சங்க பணிகளுக்காக கரூரிலிருந்து திருச்சிக்கு அனுப்பப்பட்டு, திருச்சி மாவட்டத்தின் பல்வேறு தொழிற்சங்க வேலைகளில் முக்கிய பங்காற்றியவர். கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளராக 19 ஆண்டுகள் பணியாற்றியவர். தோழர்கள் உமாநாத், பாப்பா உமாநாத், பி.ராமச்சந்திரன், கே.வரதராஜன், டி.கே. ரெங்கராஜன் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.  வயது முதிர்வு காரணமாக தற்போது கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப் பட்டிருந்தாலும், இன்று வரை தன்னை இயக்கங்களோடு இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகின்றார். தோழர் ரத்தினவேலுவின் பணி போற்றுதற்குரியது, பாராட்டுக்குரியது.