சென்னை, நவ. 29 - அரசு செலவில் மதவாத கருத்துக்களை புகுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற பெயரில் ஒன்றிய அரசின் செலவில், மாணவர்கள், கல்வி யாளர்கள், வர்த்தகர்கள், பொது மக்கள் என பல தரப்பினரை காசிக்கு ரயிலில் அழைத்துச் சென்று மதவாத கருத்துக்களை புகுத்தி வரு கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சென்ட்ரல் ரயில் நிலையத்தை செவ்வாயன்று (நவ.29) முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சென்ற மாணவர்களை காவல்துறையினர் வாயிலில் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர் சங்கத் தலைவர்கள் அனைவரையும் காவல்துறையினர் செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி, “மாணவர்களை அழைத்துச் சென்று, மகாத்மா காந்தியை படுகொலை செய்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்துக்களை கற்பிக்கின்றனர்; பயிற்சி அளிக்கின்றனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை சுட்டிக்காட்டி கலாச்சாரம் என்கின்றனர். ஒன்றிய அரசின் செயல்பாட்டை கண்டித்து நடைபெறும் இந்த போராட்டத்தில் ஜனநாயக சக்திகளும் இணையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆளுநர் ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் திட்டமிட்டு ஆட்களை தேர்வு செய்து காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வுக்கு அனுப்புகின்றனர்; கலவரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக தடை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு கல்வி நிலையங்களை பயன்படுத்தி மதவெறியை பரப்புகிறது. தமிழக அரசின் தடையை மீறி, கல்வி நிலைய வளாகங்களில் மதவெறி கூட்டங்கள், பயிற்சிகளை நடத்துகிறது. இதனை தமிழக அரசு தடுக்காமல் உள்ளது.” என்றும் அவர் குற்றம்சாட்டினார். இந்தப் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகி கள் சி.மிருதுளா, வே.அருண்குமார், தமிழ் (மத்தியசென்னை), ரா. பாரதி, ச.ஆனந்த்குமார், ப.க.புகழ்ச்செல்வி (தென்சென்னை), மி. காவியா, கு. குணா (வடசென்னை), மு.தமிழ் பாரதி (செங்கல்பட்டு), ஆ.டிக்சன், ர.ஸ்வேதா (திருவள்ளூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.