மதுரை:
மதுரை -திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மேலூரை அடுத்துள்ள கருங்காலக்குடி பகுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் சாலைவிபத்துகளை தடுப்பதற்காக மேம் பாலம் அமைக்கப்படும். அதற்காக ரூ.19 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
இது குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மதுரை-திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்தைத் தவிர்க்க மேம்பாலம் கட்டவேண்டுமென கருங்காலக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மக்களவைத் தேர்தலில் வாக்குசேகரிக்கச் சென்றபோதும், வெற்றி பெற்று நன்றி தெரிவிக்கச் சென்றபோதும் வலியுறுத்தினர். கடந்த ஜனவரி மாதம் ஆய்வு மேற்கொண்டு தொடர் விபத்து நடக்கும் பகுதி என்பதையும் தவிர்ப்பதற்கான ஏற்பாடு தேவை என்பதையும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஏற்றுக் கொண்டிருந்தனர். மேலும் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வாக்குறுதி அளித்திருந் தேன். இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை நேரில் சந்தித்தும், கடிதம் மூலமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். கொரோனா பெருந்தொற்றுக்காக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்திற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் 9-ஆம் தேதி கருங்காலக்குடி பாலம் தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சருக்கு மீண்டும் கடிதம் எழுதி, நேரிலும் வலியுறுத்தினேன்.இந்த நிலையில் கருங்காலக்குடியில் மேம்பாலம் கட்ட ரூ.19 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் நிதின் கட்கரி நவம்பர் 6-ஆம்தேதி எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.தீபாவளிப் பண்டிகை காலத்தில் பெறப்பட்ட இந்தத் தகவல் மதுரை மக்களவைத் தொகுதியில் உள்ள மேலூர் தொகுதி மக்களுக்கான பரிசு மட்டுமல்ல; மதுரை - திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைவருக்கும் கிட்டிய பரிசு என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.