மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு 24-ஆவது மாநில மாநாடு ஜனவரி 3 முதல் 5 வரை விழுப்புரத்தில் நடைபெறுகிறது. மாநாட்டின் துவக்கமாக நடைபெறும் பேரணியில், மாநிலம் முழுவதும் வேராகப் பரவியுள்ள கிளைகளில் இருந்து ஏராளமானோர் பேரணியில் அணிவகுக்க உள்ளனர். இந்நிலையில், இம்மாநாட்டுப் பேரணியில் பங்கேற்பதற்காக, 14 வயது மாணவர் ஆதித்யா செங்கொடியோடு சைக்கிளிலேயே விழுப்புரத்திற்கு மேற்கொண்ட பயணம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவரான ஆதித்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் செந்தொண்டர். பேரிடர் காலங்களில் தங்களது சேமிப்புப் பணத்தை, தனது தம்பியோடு இணைந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு செலவிடுவதுடன், நோட்டுப் புத்தகம், பேனா உள்ளிட்ட உபகரணங்களையும், உணவையும், வீடு, வீடாக வழங்கும் அளவிற்கும் மனிதாபிமானமும் பக்குவமும் பெற்றவர். அதுமட்டுமல்ல, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்னடபாளையத்தில் உள்ள குப்பைக் கிடங்கை அகற்றவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இளம் போராளி. இந்நிலையில், மாநாட்டிற்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஆதித்யாவை, நெடுஞ்சாலையில் பார்த்த கட்சியின் மூத்தத் தலைவர் டி.கே. ரங்கராஜன் வாஞ்சையோடு வாரி அணைத்துக் கொண்டார். பொன்னாடை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலை உயர்த்திப் பிடிக்கும் அடுத்தடுத்த தலைமுறையின் சாட்சி தான் ஆதித்யா என்றால் மிகையில்லை.