tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு ஒரு வெகுஜன இயக்கமாய் - பி.சம்பத்

சமூக நீதிக்கான  சமர்க்களத்தில்...

தென்மாவட்ட சாதிய மோதல்களின் போது நடைபெற்ற பல சம்பவங் களை இன்று நினைத்தாலும் நமது நெஞ் சங்கள் பதறுகின்றன. இந்தியாவில் நிலவும் சாதியமைப்பு இந்திய சமூகத்தை ஒரு கொதி கலனாக மாற்றியிருக்கிறது. சமூகத்தில் நிலவும் சிறுசிறு சச்சரவுகளும் சம்பவங்களும் கூட பெரும் மோதல்களாக மாறியிருக்கின் றன. இம்மோதல்கள் காரணமாக எந்த தவறும் செய்யாத - ஏதோ ஒரு சமூகத்தில் பிறந்திருந்த காரணத்தினாலேயே பலர் படுகொலை செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டத்தில் 1995இல் நடை பெற்ற ஒரு சம்பவம்தான் தென் மாவட்ட சாதிய மோதல்களுக்கான துவக்க காரணமாக இருந்துள்ளது. சேர்ந்தமரம் அருகே உள்ள வீரசிகாமணி கிராமத்தில் ஒரு பேருந்து ஓட்டு நருக்கும் மாணவர்களுக்குமிடையே ஏற்பட்ட சச்சரவு அப்பகுதியில் பெரும் கலவரமாக வெடித்துவிட்டது. ஓட்டுநரும் சச்சரவில் சம்பந்தப்பட்ட மாணவர்களும் வேறுவேறு சமூகத்தை சார்ந்தவர்கள். இதுவே இரு சமூகங்களுக்கிடையிலான பெரும் மோதலுக்கு காரணமாகியது. இம்மோதல் நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் பரவி பக்கத்து மாவட்டங் களை தொட்டு - தென் மாவட்டங்களில் பரவ லாக நடைபெற்ற சாதிய மோதலாக உரு வெடுத்தது. இம்மோதலில் படுகொலை செய்யப்பட்டவர்கள் பலர். இதற்குமேல் பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். தென் மாவட்டங்களின் பரவலான பகுதிகளில் பதட்டம் நிலவியது. இதனால் பல ஊர்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பேருந்து போக்குவரத்து இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்க்கை நிலைகுலையும் அளவிற்கு நிலைமை சென்றது. 

அமைதிக்கான முயற்சியில்...

இச்சம்பவம் அறிந்தவுடன் சிபிஐ(எம்) தோழர்கள் அமைதி ஏற்படுத்த களத்தில் இறங்கினர். பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமையை அறிந்த னர். இரு தரப்பு மக்களையும் சந்தித்து ஒற்று மைப்படுத்த முயன்றனர். உயிர், உடைமை இழந்தவர்களுக்கு ஆறுதலும், நிவாரணப் பொருட்களும் வழங்கினர். கட்சியின் நெல்லை மாவட்டக்குழு செயலாளர் வீ.பழனி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கிருஷ்ணன், ஆர்.கருமலையான், பி.ஜெயராஜ், கே.ஜி. பாஸ்கரன், தென்காசி தாலுகா குழுவின் பல முன்னணி ஊழியர்கள் உள்ளிட்ட தலைவர்கள் இத்தகைய பணிகளில் ஈடுபட்டனர். இவர்க ளோடு அக்காலத்தில் நானும் பல கிராமங் களுக்கு சென்றிருந்தேன். நெல்லை மாவட்டத் தலைவர்கள், நெல்லை மாவட்ட ஆட்சியர் - மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து அமைதி திரும்ப உடனடி நடவடிக்கை கள் மேற்கொள்ளுமாறு வேண்டினர். கட்சியின் மாநிலக்குழுவும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்டி ஒற்றுமையையும், அமைதியை யும் நிலைநாட்டுமாறு மக்களுக்கு வேண்டு கோள் விடுத்து அறிக்கை வெளியிட்டது - அந்த அறிக்கை பத்திரிகைகளில் பரவலாக வெளி வந்தது. மோதலுக்கு காரணமான குற்றவாளி களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கு மாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் தமிழக அரசை மாநிலக்குழு வலியுறுத்தியது. 

அலட்சியமாய் பேசிய ஆட்சியர்

அப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சியரை சிபிஐ(எம்) தலைவர்கள் சந்தித்து பேசியபோது அவர் தெரிவித்த கருத்துக்கள் நம் தோழர்களை வியப்பும், அதிர்ச்சியும் அடைய வைத்தன. “இம்மோதல்கள் சமூகத் தில் நடைபெறும் சாதாரண சம்பவங்கள் தானே? அதற்காக ஏன் இப்படி பதட்டத்தை வெளிப்படுத்துகிறீர்கள்? இதை தெரிவிப்பதற் காகத்தான் நீங்கள் வந்துள்ளீர்கள் என்பது எனக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் உங்களை சந்தித்திருக்கவே மாட்டேன்” என அவர் அலட்சியமாகக் கூறியுள்ளார். இப்படிப் பட்ட அதிகாரிகள் பொறுப்பில் இருந்தால் இவர்களால் பதட்டத்தை தணித்து மக்களி டையே ஒற்றுமையை எப்படி ஏற்படுத்த முடியும். இவர்களால் மக்களின் நம்பிக் கையை எவ்வாறு பெற முடியும்? என்ற கேள்வி கள், மிகுந்த ஆதங்கத்துடன் செயல்பட்ட நம் தோழர்களின் மனதில் உதித்தன. கட்சியின் நெல்லை மாவட்டத் தலைவர் கள் முன்முயற்சி எடுத்து அனைத்து கட்சி தலை வர்கள் கூட்டத்தை நடத்தி அவர்களையும் மக்களை ஒற்றுமைப்படுத்தும் பணியில் இணைத்தனர். அப்போது அஇஅதிமுக ஆட்சியில் இருந்தது. ஆகவே அக்கட்சி தவிர இதர பல அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று நம்முடன் இணைந்து செயல்பட்டனர். நாமும் இதர கட்சி தலைவர்களும் இணைந்து இரு தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து, சாதி வேறுபாடு துறந்து மோதலை தவிர்த்து மக்கள் ஒற்றுமையை நிலைநாட்டுமாறு வேண்டுகோள் விடுத்தோம். இவ்வாறு நாமும், இதர கட்சி தலைவர் களும் இணைந்து மேற்கொண்ட முயற்சி களுக்கு பலன் இருந்தது. சில பகுதிகளில் சகஜநிலை திரும்பியது. இருப்பினும், சாதிய சக்திகளும் வேகமாக செயல்பட்டதால் மோதல்கள் புதிய பகுதிகளுக்கு பரவின. தென்காசியை சுற்றியுள்ள மேலும் பல கிரா மங்களுக்கும் சிவகிரி, கங்கைகொண்டான் மற்றும் தச்சநல்லூர் அருகில் உள்ள துறையூர், கரையிருப்பு ஆகிய கிராமங்களுக்கும் மோதல்கள் பரவின. கூடவே, பக்கத்து மாவட்டங்களான தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தின் பல கிராமங்களிலும் மோதல் கள் பரவி பதட்டம் உருவாகியது. 

பெருந்திரள் உண்ணாவிரதம்

எனவே, அமைதியையும், ஒற்றுமையை யும் ஏற்படுத்த விரும்பிய சக்திகள் வேகமாக செயல்பட வேண்டிய காலமாக அக்காலம் இருந்தது. நிலைமை மோசமாகி மோதல்கள் பரவுவதை பற்றி கவலையடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங் களில் மோதலை கைவிட்டு அமைதியையும், ஒற்றுமையையும் ஏற்படுத்த வலியுறுத்தியும், அஇஅதிமுக அரசின் கையாலாகாத்தனத்தை கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தி யும் 2.12.1995இல் பெருந்திரள் உண்ணா விரதம் மேற்கொள்ளுமாறு அறைகூவல் விடுத்தது. இந்த உண்ணாவிரதம் நெல்லை மாவட்டத்தில் 34 இடங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 25 இடங்களிலும், விருதுநகர் மாவட்டத்தில் 18 இடங்களிலும் ஆக 77 இடங்களில் நடைபெற்றது. உண்ணாவிரதம் நடைபெற்ற பல இடங்களில் சாதிய மோதல் களால் பாதிக்கப்பட்ட மக்களின் ஒரு பகுதியின ரும் கலந்து கொண்டனர். சிபிஐ(எம்) நடத்திய இந்த உண்ணாவிரதத்தில் வேறு பல அரசி யல் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் பங்கேற்று ஆதரவு அளித்ததோடு அதன் தலைவர்கள் ஒற்றுமையை வலியுறுத்தி உரையாற்றினர்.

உண்ணாவிரதத்தையொட்டி சாதி ஒடுக்கு முறை களைந்து ஒற்றுமையுடன் செயல்பட வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள் மூலம் கிராமங்களில் விரிவான பிரச்சாரம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு மக்கள் ஒற்றுமைக்கான அடிப்படை என்பது பிரச்சாரத்தின் அழுத்தமாக இருந்தது. பதட்டம் நிறைந்த அன்றைய காலத்தில் சிபிஐ(எம்) நடத்திய இந்த பெருந்திரள் உண்ணாவிரதமும், பிரச்சார மும் அமைதியை விரும்பிய சாதாரண மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 

78 வகை தீண்டாமை  28 வகை வன்கொடுமை

தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீண்டாமைக் கொடுமைகள் நிலவி வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கொடுமைகளை ஒழிக்கவும், தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும், தலித் மக்கள் போராடினால் அவர்கள் மீது வன்கொடுமைகள் ஏவப்படு கின்றன. உண்மை இவ்வாறு இருக்க, ஒரு சிலர் விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய காலத்தில் தீண்டா மையோ, வன்கொடுமையோ சமூகத்தில் இல்லையென அடித்துப் பேசுகிறார்கள்.  கிராமங்களில் உள்ள சாதிய சக்திகள் தங்களை தற்காத்து கொள்ள இந்த வாதத்திற்கு வக்காலத்து வாங்கு கின்றனர். எனவே, தீண்டாமை வன்கொடுமைகள் குறித்து கள ஆய்வுகளை நடத்தி அம்பலப்படுத்த முடிவு செய்யப் பட்டது. சிபிஐ(எம்) மற்றும் வெகுஜன அமைப்புகள் சார்பாக தமிழகத்தின் 26 மாவட்டங்களில் உள்ள 378 கிராமங்களில் கள ஆய்வுகள் நடத்தப்பட்டன. 

அதிர்ச்சியான உண்மை என்னவென்றால், ஆய்வு நடத்தப்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஏதேனும் சில வடிவங்களில் தீண்டாமை மற்றும் வன்கொடுமைகள் நிலவுவதை அறிய முடிந்தது. 78 வகையான தீண்டாமைக் கொடுமைகளும் 28 வகையான வன்கொடுமைகளும் இக்கிராமங்களில் நிலவுவதாக இந்த ஆய்வின் மூலம் அறிய முடிகிறது (இதன் முழு விபரமும் சாதி, வர்க்கம், விடுதலை என்ற நூலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது). இந்த ஆய்வு விபரங்கள் பத்திரிகைகளில் பரப்பரப் பான செய்திகளாக வெளிவந்தன. சட்டமன்றத்திலும் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் நிலவுவதை கே. பாலபாரதி எம்.எல்.ஏ அம்பலப்படுத்தினார். கட்சியின் அன்றைய மாநில செயலாளர் தோழர் என்.சங்கரய்யா தமிழக முதல்வரை சந்தித்து தீண்டாமைக் கொடுமை களுக்கு முடிவுகட்ட வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி தீண்டாமை ஒழிப்பிற்கான பல முடிவுகளை மேற்கொண்டார். தீண்டாமை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகள் மேற் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப் பட்டது. தமிழக அரசின் சார்பாக விரிவான தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது. சாதிய மோதல்களின் காரணமாக பதட்டம் நிறைந்த அன்றைய நாட்களில் அதற்கு காரணமான தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்க சிபிஐ(எம்) எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு பிற அரசியல் இயக்கங்கள் மட்டுமல்ல, தமிழக அரசும் செவி சாய்த்தது. இத்தகைய சூழல் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் ஒரு வெகுஜன இயக்கமாக அக்காலத்தில் உருவெடுக்க வழிவகுத்தது.