மனிதக் கழிவை மனிதர் சுமக்கும் இழிவுக்கு முடிவு கட்டும் இயந்திர மயத்திற்கான சட்ட திருத்தத்தை கைவிடுவதா? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நான் நாடாளுமன்றத்தில் மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டத் திருத்த வரைவு 2020 என்ன நிலைமையில் உள்ளது என்று கேள்வி (எண் 694/ 27.05.2023) எழுப்பி இருந்தேன்.
அதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்துள்ள பதில் அதிர்ச்சி அளிக்கிறது.
மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டத் திருத்த வரைவு 2013க்கு திருத்தம் செய்யும் எண்ணம் எதுவும் அரசின் வசம் இல்லை என்று கூறியுள்ளார்.
மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டத் திருத்த சட்ட வரைவு 2020 என்பது கழிவு அகற்றுவதை முழுமையாக இயந்திர மயம் ஆக்குவதே நோக்கம் கொண்டது என்றே தகவல்கள் தரப்பட்டு இருந்தன. இத்தகைய சட்டம் துப்புரவு பொறியியலை மேம்படுத்துவது, பல்கலைக் கழகங்களில் சிறப்பு துறைகள் உருவாக்குவது ஆகிய முன் முயற்சிகளுக்கு உதவி செய்யக் கூடும்; மேலும் 2013 சட்டத்தை வலுப்படுத்துவதற்கான வழி வகைகளையும் செய்ய இயலும். ஆனால் அமைச்சரின் பதில் அரசாங்கத்தின் அரசியல் உறுதி மீது பெரும் ஐயத்தை உருவாக்குவதாக உள்ளது.
ஆகவே மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டத் திருத்த வரைவு 2020 இன் உள்ளடக்கத்தை பொது வெளியில் சுற்றுக்கு விட்டு கருத்துக்களைப் பெற்று முழுமையான இயந்திர மயத்தை உறுதி செய்ய வேண்டும். 2013 சட்டத்தை பலப்படுத்த வேண்டும்.
இல்லையெனில் மனிதக் கழிவை மனிதரே அகற்றும் கொடுமையை ஒழிக்க முடியாது, மனித உயிர்கள் பறி போவதை தடுத்து நிறுத்தவும் முடியாது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.