tamilnadu

img

‘மண்வெட்டி பிடிக்கும் மனிதன்’ - ஆர்.ரமணன்

கவிஞர்கள் கிராமங்களின் பசுமையையும் காற்றையும் தண்ணீரையும் பாடிய அளவிற்கு விவசாயிகள் குறித்து பாடியிருப்பது குறைவாகவே இருக்கும். அப்படி பாடப்பட்ட ஒரு கவிதை  ‘மண்வெட்டி பிடிக்கும் மனிதன்’ என்பது. அதே தலைப்பில் வரையப்பட்ட ஓர் ஓவியத்தைப் பார்த்து ஒரு கவிஞர் உணர்ச்சிவசப்பட்டு எழுதிய அந்தக் கவிதை மிகவும் பிரபலமானது.  இது நடந்தது 19ஆம் நூற்றாண்டில். எழுதியவர் ஒரு அமெரிக்கக் கவிஞர். அவர் பெயர் எட்வின் மார்க்கம்.  ஏப்ரல் 23,1852 பிறந்து  மார்ச் 7, 1940 வரை வாழ்ந்தவர். 1923இலிருந்து 1931 வரை ஒரேகான் அரசவைக் கவிஞராக இருந்தவர். எட்வினின் பாடல் ‘ அடுத்த ஆயிரம் ஆண்டுகளின் போர் முழக்கம்’ என்றார் தத்துவவாதியும் சமாதான செயல்பாட்டாளாரும் புதின எழுத்தாளருமான ஜே.வில்லியம் ஹட்சன். (இந்து ஆங்கில நாளிதழ் ஞாயிறு மலரில் சுதா தேவி நாயக்கின் கட்டுரையிலிருந்து). இந்தக் கவிதை 1898இல் வெளியாகி மிக பிரபலமானது. எட்வின் கவிதை படிப்பது அடிக்கடி நிகழ்ந்ததைப் போலவே நியூயார்க் நகரில் தொழிலாளர் குழுக்களிடையே அவர் உரையாற்றுவதும் நிகழ்ந்தது. இவரை அந்தக் கவிதையை எழுதத் தூண்டிய ஓவியம் ழான்- ஃபிரான்காய்ஸ் மிலே  (Jean-François Millet) என்பவர் வரைந்தது. அவர் ஒரு ஃபிரெஞ்சு ஓவியர். 1830-70 களிடையே எழுச்சி பெற்ற எதார்த்தவாத ஓவியப் பிரிவை சேர்ந்தவர். அந்தக் காலத்தில் மேலோங்கியிருந்த வீர காவிய போக்கிற்கு மத்தியில் கிராமச் சூழலையும் அங்குள்ள விவசாயத்  தொழிலாளிகளையும் இவர்கள் வரைந்தனர். அந்த ஆங்கிலப் பாடலின் சில பகுதிகள்:

மண்வெட்டி பிடிக்கும் மனிதன்

நூற்றாண்டுகளின் சுமை அழுந்த
மண்வெட்டியின் மீது சாய்ந்து
நிலம் நோக்கும்
அவன் முகத்தில்
காலங்களின் வெறுமை.
முதுகிலோ உலகின் முழுப்பாரம்.

களிப்பிற்கும் விரக்திக்கும்
அவனை சடலமாய் மாற்றியது யார்?
துக்கமும் நம்பிக்கையும் இல்லாத
சடமாய்
சலனமில்லா திகைப்புற்று
எருதின் சகோதரனாய்
அவனை ஆக்கியது யார்?

இந்த முரட்டுத் தாடையை
கவிழ்ந்து விழச் செய்தது யார்?
இந்த புருவத்தை
மேலுயர்த்தியது எவர் கை?
இந்த மூளைக்குள் ஓடும் சிந்தனைப் பொறியை
ஊதி அணைத்தது எவர் மூச்சு?
..........
இதைவிடக் கொடிய வடிவு
வேறு எதுவும் இல்லை.
இதைவிட
உலகின் கண்மூடித்தன பேராசைக்கு
கண்டனக் குரல்
வேறு எதுவும் இல்லை.
இதைவிட
ஆன்மாவிற்கான கொடும் அறிகுறிகள்
வேறு எதுவும் இல்லை.
இதைவிட
பூவுலகிற்கு அபாயம் நிறைந்தது
வேறு எதுவும் இல்லை.

அவனுக்கும் தேவலோகத்திற்கும் இடையில்
என்ன ஒரு பாழ்வெளி?
உழைப்புச் சக்கரத்தின் அடிமை அவன்
பிளேட்டோவைக் கண்டானா,
சுழலும் நட்சத்திரக் கூட்டத்தைக் கண்டானா?
இசையின் சிகரங்கள் தொடும் தொலைவும்
கிழித்தெழும் விடியலும்
சிவந்து மலரும்  ரோஜாவும்
அவனுக்கு என்ன பொருள்?

அஞ்சிடும் இந்த வடிவினூடே
துயருறும் காலம் விழித்து நோக்கும்;
அந்த வலிமிகு கூனலில்
காலத்தின் துன்பியல் தளும்பும்;
அஞ்சிடும் இந்த வடிவினூடே
மனிதகுலம்
வஞ்சிக்கப்பட்டு சூறையாடப்பட்டு,
நிந்திக்கப்பட்டு  சுயமிழக்கப்பட்டது.

உலகின் நீதிமான்களிடம
இந்த வடிவு அரற்றுவது
எதிர்ப்பு மட்டுமா?
முன்னறிவிப்பும்  அன்றோ?

ஓ எசமானர்களே, பிரபுக்களே,
மிசையெங்கும் ஆள்பவர்களே,
நீங்கள் கடவுளுக்கு கையளிப்பது
ஆன்மா வற்றிய, உருக்குலைந்த
இந்த அவலட்சணத்தையா?
இதை என்றைக்காவது எப்படி
நிமிரச் செய்வீர்கள்?

நிரந்தரம் கொண்டு அதை
மீண்டும் தொட்டணையுங்கள்.
நிமிர்ந்த நடையும் ஒளியும்
திரும்பவும் அதற்களியுங்கள்.
அதனுள்ளே இசையும் கனவும்
கட்டமையுங்கள்.
நீண்ட கால இகழ்வுகளை,
வஞ்சகத் தீங்குகளை, மருந்திடா துயர்களை
மாற்றுங்கள்.
ஓ எசமானர்களே, பிரபுக்களே,
மிசையெங்கும் ஆள்பவர்களே,
எதிர்காலம் இவனை எப்படி எதிர்கொள்ளும்?
கிளர்ச்சியின் சூறாவளி உலகை உலுக்கும்போது
இவனது ஆவேசக் கேள்விகளுக்கு
அந்த நேரத்தில் என்ன பதிலுரைப்பீர்?

அந்தக் காலத்திய விவசாயியின் கோலத்தை அறச் சீற்றத்துடன் பதிவு செய்யும் இந்தப் பாடல், அதே சமயம் அவனை அந்தக் கோலத்திற்குள்ளாக்கியவர்களிடமே கேள்வியும் கேட்கிறது; முறையிடுதலும் செய்கிறது என்பது நாம் கவனிக்க வேண்டியதாகும். ஆனால் 20 ஆம் நூற்றாண்டுக் கவிஞரான பட்டுக்கோட்டையிடம் இந்த முறையிடுதல் இல்லை. விவசாயியின் அந்த கோலத்திற்கான  காரணத்தையும் தீர்வையும் அவன் தன் பாட்டில் வைக்கிறான்.

மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே -
பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்?
அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி
.............................................
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்

19,20 ஆம் நூற்றாண்டுகளில்  விவசாயிகளின் வேதனையை கவிஞர்கள் பதிவு செய்தது போல, இப்போது 21ஆம் நூற்றாண்டில் நம் நாட்டில் விவசாயிகள் தில்லியில் நடத்திய நீண்ட போராட்டமும் அதில் அவர்கள் அனுபவித்த துன்பங்களும் இலக்கியத்தில் போதுமான அளவு பதிவு செய்யப்பட வேண்டும்.