மன்னார்குடி:
ஊதிய செயல் விதிகள் 2019 இன் பிரிவு 6 7-இல் திருத்தம் செய்ய இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஒரு உத்தேச வரைவு சட்டத்தை முன் மொழிந்து இருக்கிறது. இதில் நடைமுறையில் உள்ள நாள் ஒன்றுக்கு 8 மணி நேர வேலை என்பது நாள் ஒன்றுக்கு 9 மணி நேரம் என திருத்தம் செய்கிறது.
அனைத்து மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் இது பொருந்தும். கால முறை பணி (ஷிப்ட் டூட்டி) அடிப்படையில் 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது மறைமுகமாக கடுமையான வேலை இழப்பை உருவாக்கும். எனவே இம்முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என டிஆர்இயு வலியுறுத்தியுள்ளது. இது பற்றி டிஆர்இயு-வின் உதவி பொதுச் செயலாளர் டி.மனோகரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ரயில்வேயில் 16339 உயர் அதிகாரிகள், 38219 நிர்வாக ஊழியர்கள், 24601 கணக்குபிரிவு ஊழியர்கள் 18898 ரயில்வே வாரியம் மற்றும் அமைச்சக பணியாளர்கள், 23978 ஸ்டோர் ஊழியர்கள், 24 மணி நேர பணிகள் மேற்கொள்ளாதசுமார் 210000 இதர பிரிவு ஊழியர்கள், உற்பத்தி தொழிற்சாலை மற்றும் பராமரிப்பு பணிமனை ஊழியர்கள் சுமார் 140000 பேர் என மொத்தம் 4 லட்சத்து 72 ஆயிரம் ஊழியர்கள் பகல் நேர பணியாற்றுபவர்கள். மீதமுள்ள 8 லட்சம் ஊழியர்கள் இரவு பகல் என ஷிப்ட் டூட்டி பார்ப்பவர்கள்.நாள் ஒன்றின் 24 மணி நேர பணியை, 8 மணி நேரம் வீதம் மூன்று பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதை 9 மணி நேர பணி என மாற்றம் செய்தால், இதே மூன்று ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம் வீதம் வாரத்தில் (ஓய்வு போக) ஆறு நாட்களுக்கு 18 மணி நேரம் கூடுதல் பணியாற்றுவார்கள். ஒன்பது ஊழியர்கள் இதே போல் பணிபுரிந்தால் 54 மணி நேர பணி கூடுதலாக ஒரு வாரத்தில் நடைபெறும். திருத்தப்பட இருக்கின்ற ஒரு ஊழியரின் ஒரு வாராந்திர பணிக்கு இது (54 மணி நேரம்) சமம். இதனால் ஒன்பது ஊழியருக்கு ஒரு ஊழியர் மிச்சம்.
இந்திய தொழிலாளர்களின் நடப்பு வருடாந்திர உழைப்பு 2162 மணி நேரம். இது அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்ய, சீன நாடுகளின் உழைப்பு நேரங்களை விட அதிகம். உலகம் முழுவதும் தொழிலாளர்களின் வார வேலை நேரம் என்பது 35– 48 மணி நேரம் தான். வேலை நேரத்தைக் கூட்டுவது தொழிலாளர்கள் மனம் மற்றும் உடல் சோர்வுக்கு வழிவகுக்கும். தொழில் கவனம் சிதறக் கூடும். மேலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க வழிவகுக்கும்.
நாள் ஒன்றுக்கு 8 மணி நேர வேலையை 9 மணி நேரமாக திருத்தினால் சுமார் 88 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலை இழப்பார்கள். எனவே தொழிலாளர்கள் சட்டத்தை திருத்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்துகிறது. இவ்வாறு டி. மனோகரன் தெரிவித்துள்ளார்.