tamilnadu

img

2024 தேர்தலை கூட்டாக சந்திக்க 17 எதிர்க்கட்சிகள் முடிவு

பாஜகவுக்கு எதிராக பொதுவான செயல்திட்டம் உருவாக்கப்படும் எனவும் அறிவிப்பு

பாட்னா, ஜூன் 23 - பாஜக-வைத் தோற்கடிக்கும் வகையில், 2024 மக்களவைத் தேர்தலை, 17 எதிர்க்கட்சிகள் கூட்டாக சந்திப்பதெனவும், இதுதொடர்பாக பொதுவான செயல்திட்டத்தை உருவாக்குவது எனவும், பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சி கள் தங்களின் ஒற்றுமையை பறைசாற்றியுள்ள நிலையில், அடுத்த கூட்டம் ஜூலை 10 அல்லது 12 தேதிகளில் சிம்லாவில் நடைபெறும்; அந்த கூட்டத்தில், பாஜக-வை முறியடிப்பதற்கான விரிவான வியூகங்கள் வகுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தலைவர்கள் பேட்டி

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இல்லத்தில் நண்பகல் 12 மணிக்குத் துவங்கி பிற்பகல் 3.30  வரை நடைபெற்ற, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி, நிதிஷ்குமார் துவங்கி, தலைவர்கள் பலரும் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். “எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஆக்கப்பூர்வமாக இருந்தது; ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் உள்ள அரசுக்கு எதிராக  ஒன்றிணைந்து போராட அனைத்து தலைவர் களும் ஒப்புக்கொண்டுள்ளனர். 2024 மக்கள வைத் தேர்தலை 17 எதிர்க்கட்சிகளும் ஒருங்கி ணைந்து சந்திக்கும். தொகுதி பங்கீடு மற்றும் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் சிம்லா கூட்டத்தில் இறுதி செய்யப்படும்” என்று நிதிஷ்குமார் கூறினார்.  “அடுத்தாண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர்ந்து போட்டியிட ஒப்புக் கொண்டோம். இந்த பொதுக் கூட்டணியின் வழிமுறைகள் குறித்து இறுதி செய்ய அடுத்த  மாதம், சிம்லாவில் நடைபெறும் கூட்டத்தில் தலைவர்கள் கலந்து கொள்வர். அந்தந்த மாநிலங்களில் போட்டியிடும் போது எப்படி ஒன்றாக பணியாற்றுவது என்பது குறித்த திட்டங் களை வகுக்க,ஜூலை மாதம் சிம்லாவில் மீண்டும் சந்திப்போம். இந்த கூட்டம் ஜூலை 10 அல்லது 12 தேதிகளில் நடைபெறும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

“இந்தியாவின் அடித்தளமே தற்போது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. எங்களு க்குள் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும், நாட்டின் அடிப்படைக் கொள்கை களைக் காக்க நாங்கள் ஒன்றுபடுவோம். அடுத்த கூட்டத்தில் பொதுவான செயல்திட்டம் பற்றி ஆலோசிக்கப்படும்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார். “பாட்னாவில் துவங்கியுள்ள இந்த முயற்சி மாபெரும் இயக்கமாக மாறும். பாஜக  ஆட்சியை அகற்றும் நோக்கத்தில் நாங்கள்  ஒன்றிணைந்து போராடுவோம். எதிர்க்கட்சி கள் ஒற்றுமையாக இருக்கிறோம். மாநிலங்களிட மிருந்து அனைத்து அதிகாரங்களும் பறிக்கப்பட்டுள்ளன. நாட்டின் வரலாற்றையே மாற்றிட பாஜக நினைக்கிறது. வரலாற்றைப் பாதுகாக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு தேர்த லைச் சந்திப்போம். ஒருவேளை 2024-இல் பாஜக  வென்றால், அதுதான் நாட்டிற்கு கடைசி பொதுத் தேர்தலாக இருக்கும்” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். “பாஜக-வின் கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில், நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூகத்திற்கும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. சிறிதும் வெட்கமின்றி, பெரும் தொழிலதிபர்களுக்காக மட்டுமே பாஜக திட்டங்களைத் தீட்டுகிறது. இதே நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லாமல் போய்விடும். பாஜக தோற்கடிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன” என்று சிபிஐ தேசியச் செயலாளர் து. ராஜா தெரிவித்தார். 

ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் பேசுகையில், “இவ்வளவு நாட்களு க்குப் பிறகு நான் உங்களுடன் பழகுகிறேன். இப்போது நான் பிட்டாக இருக்கிறேன், அவர்களையும் (பாஜக) பிட்டாக மாற்றுவேன்” என்று குறிப்பிட்டார். “ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு கிடைத்தது  போல, இந்த ஒருங்கிணைந்த முன்னணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும்” என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார். “இன்றைய தினம் நாட்டின் ஜனநாயக அமைப்புக்கள் மட்டுமன்றி, இந்திய அரசியலமைப்புச் சட்டமே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது; இந்நிலையில், நாங்கள் காந்தியைத்தான் ஆதரிப்போமே தவிர, கோட்சேவை அல்ல” என்று மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்தார். “நானும் மெகபூபா முப்தியும் ஜனநாயகம் படுகொலை செய்யப்படும் பகுதியை (காஷ்மீரைச்) சேர்ந்தவர்கள்... நேற்று அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் ஜனநாயகம் பற்றி விவாதங்கள் நடந்தன. ஏன் இந்த ஜனநாயகம் ஜம்மு -காஷ்மீரை அடை யவில்லை...? என்று. எனவே, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 17 கட்சிகள் ஒன்று  சேர்ந்திருப்பது அதிகாரத்திற்காக அல்ல, கொள்கைக்காக. நாட்டை அழிவில் இருந்து காப்பாற்றவும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் நாங்கள் ஒன்றுபட்டிருக்கிறோம்” என்று தேசிய மாநாட்டுக் கட்சித் துணைத்தலைவர் உமர்  அப்துல்லா கூறினார். முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பீகார் சென்ற பின் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த (மோடி தலைமையிலான) பாசிச, சதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவின் மறுபிறப்பை உறுதிப்படுத்த, சமூக நீதியின் பூமியான இங்கிருந்து, எதிர்க்கட்சிகளின் ஒன்றி ணைந்த போர் முழக்கம் எழுந்ததில் ஆச்சரிய மில்லை” என பதிவிட்டிருந்தார்.

எதிர்க்கட்சிகளை  ஒருங்கிணைத்த நிதிஷ்குமார்

2024 மக்களவைத் தேர்தலில், பாஜக வுக்கு எதிராக, அனைத்து எதிர்க்கட்சிகளை யும் ஓரணியில் திரட்டுவது தொடர்பாக, பீகார்  முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் தலைவரு மான நிதிஷ்குமார் முயற்சி மேற்கொண்டு வந்தார். அனைத்து எதிர்க்கட்சித் தலைவர் களையும் நிதிஷ்குமார் சந்தித்தார்.  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருமானால், நாட்டின் மதநல்லிணக்கம், ஜனநாயகம், மக்களின் அடிப்படை உரிமைகள் மிகுந்த ஆபத்துக்கு உள்ளாகும் என்பதை எடுத்துரைத்து, இதனைத் தடுக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்; தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை விலக்கி வைத்துவிட்டு, ஒன்றுபட வேண்டும் என்று தலைவர்களிடம் நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டார். பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்ற 2019 மக்களவைத் தேர்தலிலும் கூட 62  சதவிகிதமான மக்கள் பாஜக-வுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். ஆனால், அந்த வாக்கு கள் பிரிந்து கிடப்பதால், 38 சதவிகித வாக்கு களை மட்டுமே பெற்ற பாஜக அதிகாரத்தில் உள்ளது.

62 சதவிகித வாக்குகளை வைத்துள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டால், பாஜக-வை எளிதில் தோற்கடிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டி வந்தார். சுமார் 2 மாதங்களாக, நிதிஷ்குமார் மேற்கொண்ட இந்த முயற்சிக்கு வெற்றி யும் கிடைத்தது. மாநிலத்திலும், நாடாளு மன்றத்திலும் எதிரும் புதிருமாக இருந்த கட்சிகள், குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சி கள், பாஜக-வுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட முன்வந்தன.  இந்நிலையில்தான், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வகை யிலும், 2024 தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக  ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக ஆலோசிக்கவும், ஜூன் 23 அன்று அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாட்னாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  அதன்படி, பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம், பாட்னாவில் வெள்ளிக்கிழமையன்று நண்பகல் 12 மணியளவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இல்லத்தில், அவரது தலைமையில் நடைபெற்றது.

6 மாநில முதல்வர்கள் உட்பட 17 கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,  கே.சி. வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்,  சுப்ரியா சுலே, பிரபுல் படேல், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேசியச் செயலாளர் து. ராஜா, திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், டி.ஆர்.  பாலு எம்.பி., திரிணாமுல் காங்கிரஸ் சார்பில்  மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஓ பிரையன் எம்.பி., ராஷ்ட்ரிய ஜனதாதளம் சார்பில் லாலு  பிரசாத், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி,  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆம் ஆத்மி கட்சி இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாது என கருதப்பட்ட நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சஞ்சய் சிங் எம்.பி. ராகவ் சதா ஆகியோ ருடன் கூட்டத்தில் கலந்து கொண்டார். மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா (உ.பா.தா.) தலைவருமான உத்தவ் தாக்கரே, தனது கட்சியின் தலை வர்களான ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத் ஆகியோருடன் கலந்து கொண்டார்.  இவர்கள் தவிர, உ.பி. முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் கட்சித் தலை வருமான அகிலேஷ், காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா  முப்தி, சிபிஐ(எம்எல்) லிபரேசன் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, ஐக்கிய ஜனதாதளம் சார்பில் முதல்வர் நிதிஷ்குமாருடன், ராஜூ ரஞ்சன், லல்லன் சிங் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.  ஹரியானா முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலை வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஏயூடிஎப் கட்சியின் தலைவர் மவுலானா பக்ருதீன் அஜ்மல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 6 மாநில முதல்வர்கள் உட்பட மொத்தம் 17 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்எல்டி தலைவர் கடிதம்

உ.பி.யின் மறைந்த தலைவர் அஜீத் சிங்கின் மகனும், ராஷ்ட்ரிய லோக்தளம் (RLD) கட்சியின் தலைவருமான ஜெயந்த் சவுத்ரி, கூட்டத்தில் பங்கேற்க ஆர்வமாக இருந்தார்.  எனினும், “முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட குடும்ப நிகழ்ச்சி காரண மாக தன்னால் பங்கேற்க முடியவில்லை” என்று கூட்டத்தை ஒருங்கிணைத்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு முன்கூட்டியே கடிதம் மூலம் தெரிவித்து விட்டார். “எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு இந்த சந்திப்பு ஒரு முக்கியமான படியாக இருக்கும் என்று நம்புகிறேன்; உங்கள் (நிதிஷ்குமார்)குறிக்கோளில் வெற்றிபெற உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்” என்று அந்த கடிதத்தில் ஜெயந்த் சவுத்ரி குறிப்பிட்டிருந்தார்.