‘தமிழ்நாட்டுப் பெண்கள் உயர்கல்வி, வேலைக்குச் செல்வதில் முதலிடம்’
அமைச்சர் எஸ். ரகுபதி பேட்டி
புதுக்கோட்டை, மே 7 - உயர்கல்வி பயிலச் செல்வதிலும், படித்துவிட்டு வேலைக்குச் செல்வதிலும் தமிழ்நாட்டுப் பெண்கள் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளனர் என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டியில், “மதுரை ஆதீன கார் விபத்து முற்றிலும் சாலை விபத்துதான். பாஜகவுக்கு ஆதரவைப் பெருக்குவதற்காக சதி இருப்பதாக, அவர் சொன்னாரா எனத் தெரியவில்லை. குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை ஆய்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள். இந்தியாவிலேயே உயர்கல்விச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலம் தமிழ்நாடு. அதேபோல, படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமுள்ள மாநிலம் தமிழ்நாடு. இவற்றையெல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியை எழுப்பிச் சொல்ல வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணியே வரும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும். தொடர்ந்து இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைய வேண்டும் என்று மக்களின் விரும்புகிறார்கள்” என்றார்.