tamilnadu

கொரோனாவும் கோமியமும் - சுரேஷ் பிரீத்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் அதிர்ந்து போயிருக்கும் மனித சமூகத்திற்கு இந்த வைரசை எப்படியாவது அழிக்க வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கும் போது வைரஸ் பற்றிய வதந்திகளும் உலகம் முழுவதும் பரப்பப்படுகிறது.  வதந்திகள் என்பது இரண்டு வகைப்படும். இந்த வைரஸை பற்றி மிகைப்படுத்தி சொல்வதும் இந்த வைரசை குணமாக்க தவறான மருந்துகளை பரப்புவதும். இந்தியாவில் மதவாதிகள்  மாட்டு சிறுநீர் ஒரு நல்ல மருந்து என்றும் அதை  அருந்தினால் இந்த நோய் குணமாகும் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு சாமியார் இந்த தாயத்தை கட்டினால் வைரஸ் உங்களை அணுகாது என்று மக்களினுடைய அறியாமையைப் பயன்படுத்தி  பணம் சம்பாதிக்கிறார். இதற்கு பின்னால் வியாபாரம் தான் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை பசுமாடு என்பது வெறும் மாடு என்பதற்கு மேலாக அதை ஒரு தெய்வத்திற்கு இணையாக பார்க்கிறார்கள். பசுமாட்டின் பால் மட்டுமல்லாமல்  அதனுடைய  சாணம், சிறுநீர் பல்வேறு மத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. பசுவின் பால் தெய்வத்தை அபிஷேகம் செய்வதற்கும் சாணத்தை கொண்டு விநாயகர் செய்வதற்கும் பசுவின், சிறுநீர் கிருமி நாசினி என்று வீடுகளில் தெளிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். தற்சமயம் நீங்கள் ‘அமேசான்’ செயலி மூலமாக மாட்டு சிறுநீரை வாங்க முடியும். உலக மக்கள் அனைவரும் ‘வியந்து’ போயிருக்கிறார்கள்.  பொதுவாக சிறுநீர் என்பது நாம் உட்கொள்ளக் கூடிய பொருட்களின் கழிவுகளை சிறுநீரகம் சுத்தம் செய்து பின் வெளியேற்றப்படும் நீராகும். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பொருந்தும்.  மாட்டின் சிறுநீர் மேற்படி மதவாதிகளும் சாமியார்களும் சொல்வது போல ஒரு மருந்துப் பொருளா? கிருமி நாசினியா? இது சம்பந்தமான ஒரு ஆராய்ச்சியை 1975ல் மாட்டின் சிறுநீரை எலிகளின் உடம்பில் செலுத்தி எந்த விதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியின் முடிவில் எலிகள் இறந்துபோனது தான் மிச்சம். அதுபோல 1926ம் ஆண்டு நாய்களுக்கு கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.  நாய்களும் இறந்துவிட்டன. மாட்டின் சிறுநீரை சோதனை செய்து பார்த்தபோது அதில் prion என்ற ஒரு பொருள் இருந்தது. இது புரோட்டின் வகையைச் சேர்ந்தது. இதனால் மாட்டிற்கு mad cow என்ற வியாதி ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி அந்த வியாதி ஏற்பட்ட மாட்டின் மூத்திரத்தையும் அல்லது அந்த மாட்டின் இறைச்சியையும் சாப்பிடுவதால் மனிதர்களுக்கும் அந்த வியாதி ஏற்படும். மேலும் இந்த வியாதியை குணப்படுத்துவதற்கு மாட்டிற்கு மனிதருக்கும் எந்த விதமான மருந்துகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. Placebo effect - என்று மருத்துவத்துறையில் ஒரு சிகிச்சை முறை உள்ளது. அது என்னவென்றால் ஒரு நோயாளிக்கு அந்த நோய்க்கான மருந்தைக் கொடுக்காமல் ஒரு குறிப்பிட்ட சம்பந்தமில்லாத  மருந்தை நோயாளிக்கு கொடுத்து நோய் சரியானால், அந்த நோயாளி, இந்த மருந்தினால் தான் இது சரியானது என்று நினைத்துக் கொண்டிருப்பார். இந்த சிகிச்சை முறைக்கு placebo effect என கூறப்படுகிறது. அதுபோல மாட்டின் சிறுநீரை குடிப்பதனால் சரியாகும் என்ற ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கையைத் தவிர சற்றும் அதில் உண்மை இல்லை.  இது சரியா தவறா என்று அரசு இப்படிப்பட்ட சமயத்திலாவது உண்மையை சொல்லவேண்டும். பிரதமர் மோடி அவர்கள், மக்கள் வதந்தியை நம்ப வேண்டாம் என்று அறிக்கை விடுகிறார். இந்த செய்திகள் வதந்தியா இல்லையா என்பதை மோடி சொல்ல வேண்டும்.  மனித குலம் சில பேருடைய தவறான முடிவுக்காக காத்திருக்காது.  அது முன்னோக்கி முற்போக்காக செல்லக்கூடியது. எனவே இதிலிருந்து மனிதகுலத்தை காப்பாற்ற விஞ்ஞானரீதியான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்பட்டு அரசுத் துறை செயல்பட வேண்டும்.