இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை மசோதா மனிதாபிமானம் காட்டுமா என்று கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.
முஸ்லிம் மக்களை குறி வைத்து அவர்களை விலக்கி வைக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள குடியுரிமை (திருத்த) மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த மசோதா 2019-ஐ, 2014 டிசம்பர் 31க்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் தவிர்த்து இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வகை செய்கிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கு மசோதாவில் குடியுரிமை பெறும் அதிகாரம் வழங்கப்படவில்லை. இம்மசோதாவை திங்களன்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். இம்மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் அறிமுகநிலையிலேயே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலை யில் மசோதாவை அறிமுகம் செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் மசோதாவை அறிமுகம் செய்வதற்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும் அறிமுகம் செய்யக்கூடாது என 80 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'இலங்கைத் தமிழ் அகதிகளை அண்டைநாட்டுக் குடிமக்களாகக் கருதாமல் 'மண்ணிழந்த மனிதர்கள்' என்று மனிதாபிமானம் காட்டுமா இந்தியக் குடியுரிமை மசோதா...?' என்று பதிவிட்டுள்ளார்.