tamilnadu

img

இந்தியாவில் புரட்சிகர கர்ப்பச் சூழல் உருவானது - சு.பொ.அகத்தியலிங்கம்

100 ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சில சாட்சிகள் - 6

நாட்டு விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும்போதே தொழிலாளர்களின் உரிமைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் தனி அமைப்பு வேண்டுமென்று இடதுசாரி மனோபாவம் கொண்டவர்கள் வலியுறுத்தினர். சோவியத் நாட்டில் புரட்சி வெற்றிபெற்று லெனின் தலைமையில் அரசு அமைந்த பின்னர் இந்த எண்ணம் வலுப்பெற்றது. இந்நிலையில் 1920 அக்டோபர் 31 அன்று மும்பையில் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) துவக்கப்பட்டது. அதனை லாலா லஜபதி ராய், ஜோசப் பாப்டிஸ்டா, என்.எம்.ஜோஷி, திவான் சமன்லால் மற்றும் பலர் நிறுவினர்.

“கொந்தளிக்கும் கடலில் சுழன்றடிக்கும் அலைகளைப் போல் வேலை நிறுத்த நடவடிக்கைகள் எங்கும் பரவின. ரயில்வே துறைமுகம், துறைமுக சரக்குப் பகுதி, இஞ்ஜினியரிங் பணிமனைகள், எண்ணெய் நிறுவன அமைப்புகள்,  அரசு நாணயம் உருவாக்குமிடம்,  அரசு அச்சகம்,  ட்ராம்வே,  கேஸ் மற்றும் மின்சாரம் வழங்குதுறை,  நகராட்சி தொழிலாளர்கள்; ஒரே வார்த்தையில் கூறுவதானால் தொழிலாளிவர்க்கம் ஒட்டுமொத்தமாக இந்த வேலை நிறுத்தங்களில் பங்கேற்றன. ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியைச் சமாளிப்பதற்காக ஊதிய உயர்வைப் பெறுவதற்காகவே இந்த வேலை நிறுத்தங்கள் துவங்கப்பட்டன” என 1920 க்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தை விவரிக்கிறார் சுகுமால் சென்.

1920-21 ஆண்டுகளில்  மக்களிடையே தோன்றிய எழுச்சி என்பது தோற்கடிக்கப்பட முடியாத அளவிற்கு உருப்பெற்றது. 1920ல் முதல் ஆறுமாதத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. இதில் 15லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். முதல் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டத்தில் நாடெங்கும் தொழிலாளரிடையே போராட்ட எழுச்சியை உருவாக்கியது. இந்தியாவின் முக்கிய தொழில் நகரங்கள் அனைத்திலும்  வேலை நிறுத்தங்கள் வெடித்தெழுந்த காலகட்டம் அது.இதன் கடும் எதிரொலி காங்கிரஸ் கட்சியிலும் எதிரொலித்தது. செப்டம்பர் மாதம் காங்கிரஸ் மாநாட்டில் தலைமையுரையில் லாலா லஜபதிராய் வெளிப்படையாகச் சொன்னவரிகள் கொதிநிலையின் அளவீடு ஆகும்.

“நாம் புரட்சிகரமான காலத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை கண்டு நம் கண்களை மூடிக் கொள்வதில் எவ்வித பயனுமில்லை.இயல்பாகவும் பாரம்பரியமான முறையிலும் நாம் புரட்சியை விரும்பாதவர்கள்தான். பாரம்பரியமாக நாம் மிக மெதுவாகச் செல்கின்ற மக்கள்தாம். எனினும் நகர்ந்து செல்வது என நாம் தீர்மானித்த பிறகு, நாம் விரைவாகவும் வேகமாகவும் அடியெடுத்து வைத்து நகர்வோம். உயிரோடு இருக்கின்ற எந்த இனமும் அதன் உயிர் வாழ்வின் போது புரட்சிகளில் இருந்து முற்றிலுமாக தப்பித்துவிட முடியாது.”

விடுதலைப் போரில் தலைமைதாங்கிய முதலாளி – நிலப்பிரபுத்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்க எழுச்சி கண்டு மிரண்டது வியப்பல்ல. வர்க்ககுணமே.  1918ல் சென்னை தொழிலாளர் சங்கம் என்கிற முதற் சங்கம் காணப்பட்டதும்; 1918, 1919, 1920 என ஒவ்வொரு ஆண்டிலும் வேலை நிறுத்தங்கள் பல்கிப் பெருகின எனில் மிகை அல்ல. கொந்தளிக்கும் மாகாணங்களில் சென்னை மாகாணமும் ஒன்றானது. ஏஐடியுசி எனப்படும் அகில இந்திய தொழிற் சங்கக் காங்கிரஸ் உதயமானதும் இப்போதுதான். அதில் ஆரம்பத்தில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட்டும் சேர்ந்தே செயல்பட்டது வரலாறு. பெருமளவு தொழில் அமைதி சீர்குலைந்து விட்டதாக இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ஏடுகள் அலறின. இந்த தட்பவெப்ப சூழல் ரஷ்யப் புரட்சியின் தொடர் வினையென ஏகாதிபத்தியங்கள் கணித்ததிலும் மிரண்டதிலும்  பிழையே இல்லை. 

ரஜினி பாமிதத்தை மேற்கோள் காட்டி சுகுமால் சென் கூறுகிறார்,  “இதன் தொடர்ச்சியாக மார்க்சிய தத்துவத்தின் முதல் ஒளிக்கீற்று  இந்தியாவை வந்தடைந்ததும், இந்திய சமூகத்தில் தெளிவுபெற்ற ஒரு பிரிவினர் – துவக்கத்தில் சிறியதாக இருப்பினும்கூட இந்த புரட்சிகரத் தத்துவத்தால் கவரப்பட்டனர். இந்திய அரசியல் வானில் இப்புரட்சியின் செல்வாக்கை நேரடியாக உணரத் தலைப்பட்டனர்.” ஆம். 1920 அக்டோபர் 17ல் தாஷ்கண்டில் கம்யூனிஸ்ட் இயக்கக் கிளை பிறந்தாலும் அதற்கான கர்ப்பச் சூழல் இந்திய அரசியல் வானில் தெளிவாக உணரப்பட்டது.