tamilnadu

img

திட்டப்பணிகளில் பணிபுரிவோரை தொழிலாளர்களாக அங்கீகரித்திடுக

இளமரம் கரீம் வலியுறுத்தல்

புதுதில்லி, ஆக.1-

மத்திய அரசின் திட்டப் பணிகளில் பணிபுரிவோரை தொழிலாளர்களாக அங்கீகரித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இளமரம் கரீம் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் புதனன்று அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் பூஜ்யம் நேரத்தில் இளமரம் கரீம் பேசியதாவது:

நாட்டில் மத்திய அரசின் கீழ் அங்கன்வாடி, பொதுஒப்புதல் பெற்ற சுகாதாரப் பணியாளர் (‘ஆஷா’), அனைவருக்கும் கல்வி, மதிய உணவுத் திட்டம் போன்ற பல்வேறு திட்டப் பணிகளில் ஒரு கோடிக்கும் அதிகமான அளவில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். மிகவும் வறிய குடும்பங்களிலிருந்து வந்துள்ளவர்கள். அவர்கள், மதிப்பூதியம் என்ற பெயரில் மிகவும் அற்பத்தொகையை ஊதியமாகப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.   

அவர்கள் அனைவரையும் தொழிலாளர்களாக அங்கீகரித்திட வேண்டும் என்று அவர்கள் நீண்டகாலமாகக் கோரி வருகிறார்கள்.  இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் 45ஆவது அமர்வு அவர்கள் அனைவரையும் தொழிலாளர்களாக அங்கீகரித்திட வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்,  சமூகப் பாதுகாப்பு மற்றும் இதர பயன்பாடுகளை அவர்களுக்கும் அளித்திட வேண்டும் என்றும்  பரிந்துரைத்திருந்தது. மேலும் அத்துறைகளைத் தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என்றும் கூறியிருந்தது. ஆனால், இந்தப் பரிந்துரை இதுவரையும் அமல்படுத்தப்படவில்லை என்பதைக் கூறுவதற்கு மிகவும் வருந்துகிறேன். இந்தியத் தொழிலாளர் மாநாட்டின் 45ஆவது அமர்வு அளித்திட்ட இந்தப் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்திட முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு இளமரம் கரீம் கோரினார்.

இவரது கோரிக்கையுடன் எம். சண்முகம் (திமுக), பினாய் விஸ்வம் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி) ஆகியோரும் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.

(ந.நி.)