tamilnadu

img

வறுமைக்கோடு பட்டியலா? வசதி படைத்தோர் பட்டியலா? தமிழக அரசு குழப்பம்

தமிழக அரசின் சார்பில் கடந்த வருடம்வறுமைக்கோட்டுக்கு  கீழ் உள்ளவர்களுக்கும் நலவாரியத்தில் உள்ளவர்களுக்கும் சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2000 வீதம் வழங்கப்படும் என்று  முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் 25 லட்சத்தை நெருங்க முடியவில்லை. எனவே விண்ணப்பங்கள் அனைவரும் கொடுக்கலாம் என்று சொல்லிபெறப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் வசதி படைத்தவர்கள் உட்பட பலரும்  2000 ரூபாய் கிடைக்கும் என்று  விண்ணப்பங்களை கொடுத்தார்கள். அதற்குப் பிறகு விண்ணப்பங்கள் சம்பந்தமாகவோ, 2000 ரூபாய் சம்பந்தமாக தமிழகஅரசு எந்தவித அறிவிப்பும் விளக்கமும் கொடுக்கவில்லை.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இப்பொழுது இந்த விண்ணப்பத்தில் உள்ளசில குறிப்பிட்ட நபர்களுக்கு, குடும்பங்களுக்கு PMJAY  என்ற காப்பீடு திட்டத்தில் ஐந்து லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது .இதற்குதமிழ்நாடு முதல்வர் காப்பீடு திட்டம்தான் உண்மையான பெயர்.  கலைஞர் முதல்வராக இருந்தபோது இரண்டு லட்சத்தில்  கொண்டு வரப்பட்டதிட்டம்; ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மேலும் இரண்டு லட்சம் சேர்த்து மொத்தம் நான்கு லட்சம் ஆக்கப்பட்டது.இதில் ஒரு லட்சம்கொடுத்த பிரதமரின் பெயரில் திட்டம் என்பதே ஒரு வகை தில்லுமுல்லுதான். இதற்கு தங்கள்  குடும்ப அட்டையில் உள்ளவர்களுடைய ஆதார்அட்டை, கணவன், மனைவியின் வங்கி புத்தகநகல்கள் - இவற்றைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் இந்த விண்ணப்பங்களை வைத்துக்கொண்டு  மேற்கண்ட ஆவணங்களை பெற்று வருகிறார்கள்.

வறுமைக்கோடு பட்டியல்
இந்த குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் எப்படி இன்சூரன்ஸ் பட்டியலில் பெயர் வந்தது என்றுகேட்டால் இவர்கள் அனைவரும் வறுமைக் கோடுபட்டியலில் உள்ளார்கள் என்றும், மேலும் விபரம்வேண்டும் என்றால்  மகளிர் திட்ட மேம்பாட்டுஅலுவலகத்தில் கேளுங்கள்  என்றும்,  இணையதளத்தில் இந்த பட்டியல் விபரம் என்பது உள்ளதுஎன்றும்  உள்ளாட்சி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. அதன்அடிப்படையில் இணையதளத்தில் சென்று பார்த்தால் 2000 ரூபாய் கேட்டு விண்ணப்பம் கொடுத்த குறிப்பிட்ட சிலரின்  பெயர்கள் வறுமைக் கோடு பட்டியலில் உள்ளது. 

உதாரணத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் 2000 ரூபாய் கேட்டு 21 ஆயிரம் விண்ணப்பங்கள் கொடுத்துள்ளார்கள். இதில் 6,636 விண்ணப்பங்கள் மட்டும் இன்சூரன்ஸ் செய்யப்படும் என்றும் இவர்கள் அனைவரும் வறுமைக்கோடு பட்டியலில் உள்ளார்கள் என்றும் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் பழனி நகராட்சிக்கு வந்தது 5560 மட்டுமே. பொதுவாக வறுமைக்கோடு பட்டியல் தயாரிப்பது உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் தான் நடைபெறும். கடந்த 2007ஆம் வருடம் கலைஞர் ஆட்சிக்காலத்தில் மு. க. ஸ்டாலின்  உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த பொழுது 2007 ஆம் ஆண்டு வறுமைக்கோடு பட்டியல் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. இதன்பிறகு வறுமை கோடு பட்டியல் தயாரிப்பு என்றபணி நடைபெறவில்லை. ஆனால் தமிழக அரசுஇது சம்பந்தமாக எந்த வித அறிவிப்பும் செய்யப்படாமல் 2000 ரூபாய் பணம் கேட்டு கொடுத்த விண்ணப்பதாரர்களின் ஒரு பகுதியினர் மட்டும் வறுமை கோடு பட்டியலின் கீழ் உள்ளார்கள் என்று சொல்லி, உள்ளாட்சி மன்றங்களுக்கு தெரிவிக்கப்படாமல், உள்ளாட்சி மன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப் படாமல் மகளிர் திட்டத்தின் மூலம்  அவர்களுக்கு மட்டும் 5 லட்சம் ரூபாய் பிரதமர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்  இன்சூரன்ஸ் செய்யபடும் என்று சொல்லி வீடுவீடாக விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் பார்த்தால் பலவசதி படைத்த நபர்கள்  வறுமைக் கோடு பட்டியலில் வந்துள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான். இவர்களில் பல பேருக்கு ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ
விரிவடைந்த காப்பீடு திட்ட அட்டை வைத்துள்ளார்கள். அவர்களுக்கு மீண்டும் எந்த அடிப்படையில் இன்சூரன்ஸ் செய்யப்படும் என்பது புரியவில்லை.

குழப்பத்தில் நிர்வாகங்கள்
இது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட மகளிர்திட்ட அலுவலகத்தில் விசாரித்த பொழுது, “எங்களுக்கு எதுவும் தெரியாது, சென்னையிலிருந்து இணையதளத்தில் அனுப்பினார்கள், களப்பணியாளர்கள் மூலம் ஆவணங்கள் பெற அனுப்பி உள்ளோம்”  என்று பதில் வருகிறது.  உள்ளாட்சிமன்றங்களுக்கு தெரியாமல்   யார் இந்த பட்டியலை தயாரித்தது என்பது புரியாத புதிராகஉள்ளது.  சென்னையில் உள்ள அலுவலகத்தில் தானாகவே வறுமைக் கோடு பட்டியல் தயார் செய்ய முடியுமா?தமிழக அரசு 2000 ரூபாய் பணம் கேட்டுகொடுத்த விண்ணப்பதாரர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படவில்லை என்று சொன்னால் தகுதியான நபர்களுக்கு இன்சுரன்ஸ் செய்யப்படுவதில்  மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை.ஆனால் ஏற்கனவே இன்சூரன்ஸ் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் இன்சூரன்ஸ் செய்வதும் இதுதான் வறுமைக் கோடு  பட்டியல் என்பதும் 2007ல் எடுத்த பட்டியல் செல்லாது என்பதும்  மிகப்பெரிய மோசடியாகும்.  வறுமைக்கோடு பட்டியலை வைத்துத்தான் அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற விண்ணப்பம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. குறிப்பாக முதியோர் பென்சன், விதவை பென்சன்,பல்வேறு அரசு சலுகைகளுக்கு வறுமைக்கோடு பட்டியல் தேவைப் படுகிறது.  கடந்த 2007ஆம் வருடம் வறுமைக்கோடு பட்டியல் தயாரிக்கப்பட்டது போல் தயாரிப்பது தான் சரியாக இருக்கும். இன்று கிராமப்புறங்களில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது. ஆனால், உள்ளாட்சி மன்றங்களுக்குத் தெரியாமல் கிராம சபைகளில் நிறைவேற்றாமல்  வறுமைக்கோடு பட்டியல் தயாரிப்பு என்பது சட்டப்படி தவறாகும். 

உண்மையான வறுமைக்கோடு பட்டியல்
எனவே தமிழக அரசு முறையான வறுமைக்கோடு பட்டியலை தயாரித்து ஏழை எளியமக்களுக்கு இன்சூரன்ஸ் மற்றும் அரசின் பிறசலுகைகள்  சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்கள்மூலமும் கிடைக்கவும்; நகர்ப்புறங்களில் முறையான அறிவிப்பு  செய்து விண்ணப்பங்கள் பெற்றுதயாரிக்கவும் வேண்டும். மேலும் இதில் விடுபட்டவர்களுடைய பெயர்களை சேர்ப்பதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். இல்லையெனில் இந்தப் பட்டியல் வறுமைக்கோடு பட்டியல் அல்லவசதிபடைத்தோர் பட்டியல் என்றுதான் பொருள்படும்.