ஞாயிறு அன்று நடைபெற்ற அஞ்சல் துறையில் பல்வேறு பணிகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் விரைவில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அறிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் பூஜ்யம் நேரத்தில் அஇஅதிமுக உறுப்பினர்களும், திமுக உறுப்பினர் திருச்சி சிவாவும் அஞ்சல் துறைத் தேர்வுகளைத் தமிழில் நடத்துவது தொடர்பாக அரசாங்கத்தின் பதில் என்ன என்று அறிந்துகொள்ள விரும்பினார்கள். எனினும், மாநிலங்களவைத் தலைவர் அவ்வாறு என்னால் அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறினார். எனினும் உறுப்பினர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியதால் மாநிலங்களவைத் தலைவர் அவையை ஒத்தி வைத்தார்.
பின்னர் மாலையில் அவை கூடியபோது, மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ஞாயிறு அன்று நடைபெற்ற அஞ்சல்துறைத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் விரைவில் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அறிவித்தார். மேலும் அவர், அரசாங்கம் தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் மதிப்பதாகவும் கூறினார்.
டி.கே.ரங்கராஜன்
இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எழுந்து, அனைத்துத் துறைகளின் தேர்வுகளுமே அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநில மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
(ந.நி.)