tamilnadu

img

மீண்டும் ‘டிஸ்லைக்’ குகளை அள்ளிக் குவித்த மோடி உரை... மானத்தைக் காப்பாற்ற ஆப்சன் பட்டன்களை அணைத்துப்போட்டது பாஜக...

புதுதில்லி:
பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரை, இரண்டாவது முறையாக நாட்டு மக்கள் மத்தியில் வெறுப்பைத் தேடித் தந்துள்ளது. யுடியூப்-பில் மோடியின் உரையைக் கேட்ட பலரும், அவரின் பேச்சு தங்களுக்குப் பிடிக்கவில்லை; இந்தப் பேச்சை நாங்கள் வெறுக்கிறோம் என்பதற்கான டிஸ்லைக் (Dislike) பொத்தானை அழுத்தி அதிர்ச்சி அளித்துள்ளனர்.

பிரதமர் மோடி ஒவ்வொருமுறை வானொலி, தொலைக்காட்சிகளில் பேசும்போதும், மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுவதும், பின்னர் அது புஸ்வாணமாக போவதாகவும் வாடிக்கையாகி விட்டது. ஊரடங்கின் முதற்கட்டத்தில், 21 நாட்களில் கொரோனாவை ஒழித்து விடுவேன் என்று பிரதமர் மோடி கூறினார். அதைநம்பி இந்திய மக்கள் 21 நாட்களும் வீட்டுக்கு உள்ளேயே முடங்கினர். 

ஆனால், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை முழுமையாக சோதனை செய்யாமல் நாட்டுக்குள் அனுமதித்தும், பல்வேறு மாநிலங்களில் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்களை - அவர்கள் இருக்கும் இடங்களிலேயே தங்க வைப்பதற்கோ அல்லது பாதுகாப்புடன் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்கோ ஏற்பாடுகளைச் செய்யாமல், கடைசியில் கால்நடையாகவே நாடு முழுவதும் கொரோனா சென்றுசேர வழிவகுத்தது. கொரோனாவை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக, மின் விளக்குகளை அணைத்து தீபம்ஏற்றுங்கள், கொரோனா தடுப்பு களப்பணியாளர் களை உற்சாகப்படுத்த வீட்டு வாசலில், முற்றத்தில், பால்கனியில் நின்று கைதட்டுங்கள் என்று பிரதமர் மோடி கூறிய அனைத்தையும், பிரதமர் சொல்கிறார் என்பதற்காக நாட்டு மக்கள் செய்தனர்.

ஆனால், 21 நாட்கள் அல்ல, 200 நாட்களாகியும் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்கள் விடபடமுடியவில்லை. மாறாக, இந்தக் காலத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவிற்கு மக்கள் வந்து விட்டனர். சிறு, குறு தொழில்கள் முடங்கி விட்டன. அழுக்குப் படாத வேலைகளில் இருக்கும் மாதச்சம்பளக்காரர்கள் மட்டும் 1 கோடியே 89 லட்சம் பேர் வேலையைப் பறிகொடுத்து, எதிர்காலத்தை இழந்து விட்டனர்.இவற்றைக் கூறியபோது, இதற்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் என்று கூறி ரூ. 20 லட்சம் கோடிக்கான பொருளாதாரத் தொகுப்பை, இதேபோல டி.வி.யில் தோன்றி மோடி அறிவித்தார். ‘ஆத்ம நிர்பர் பாரத் அபியான்’ என்று திட்டத்திற்கு பெயரெல்லாம் சூட்டினார். ஆனால்,  இந்த தொகுப்பின் நிஜமான மதிப்பு 1.86 லட்சம் கோடிதான் என்று பொருளாதார நிபுணர்கள் உண்மைகளை புட்டுபுட்டு வைத்தனர். ரூ. 20 லட்சம் கோடி இருக்கட்டும், முதலில் குடும்பம் ஒன்றுக்கு மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் தாருங்கள்என்று அவர்கள் கூறினர். ஆனால், புளுத்துப்போன 5 கிலோ அரிசியோடு மோடி அரசு கடமையை முடித்துக் கொண்டது.

இதனால் வெறுத்துப்போன மக்கள், ஆகஸ்ட் 30 அன்று, பிரதமர் ‘மன் கி பாத்’ வானொலி உரை அடங்கியயுடியூப் வீடியோ-விற்கு டிஸ்லைக் (Dislike) பட்டனே நொறுங்கும் அளவிற்கு அதனைத் தட்டி, தங்களின் வெறுப்பை அள்ளிக் கொட்டினர். இனிமேலும் ஏமாற மாட்டோம் என்று காட்டினர். தேர்வுகள் ஒத்திவைப்பு மற்றும் வேலையின்மை ஆகிய பிரச்சனைகள் பெரும் விவாதமாக எழுந்த நேரத்தில், மோடி பொம்மைகள் தயாரிப்பு மற்றும் மொபைல் கேம்கள் குறித்து மன் கி பாத்தில், பேசியது, மக்களுக்கு அப்போது பெரும் ஆத்திரத்தையே உண்டுபண்ணி விட்டது.

இந்நிலையில்தான், பண்டிகைக் காலம் நெருங்குவதையொட்டி, கொரோனாவிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி செவ்வாயன்று மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஆனால், இந்த உரைக்கும் யுடியூப்-பில் வெறுப்பு (Dislike) பொத்தானை அழுத்தி மக்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.மோடியின் பேச்சை பாஜக-வின் அதிகாரப்பூர்வ யுடியூப் சேனல் நேரலையாக ஒளிபரப்பிய நிலையில், ஒரு சில நிமிடங்களிலேயே 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வெறுப்புப் பொத்தானை அழுத்தியுள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பாஜக தலைமை, கொஞ்சம் விட்டால், இந்த எண்ணிக்கை லட்சக்கணக்கில் போய்விடும் என்று அஞ்சி, மக்கள் தங்களின் விருப்பு - வெறுப்பை (Like or Dislike)வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பையே யூடியூப் பக்கத்திலிருந்து அணைத்து, மோடியின் மானத்தைக் காத்துள்ளது. விமர்சனங்களைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பையும் நீக்கியுள்ளது.