tamilnadu

img

அமெ.வுடனான ராணுவக் கூட்டணி இந்தியாவின் நலனுக்கானது அல்ல... சீத்தாராம் யெச்சூரி - து. ராஜா அறிக்கை

புதுதில்லி:
இந்தியா, அமெரிக்காவுடன் ராணுவக் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டிருப்பது இந்தியாவின் நலனுக்கானது அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜாவும் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

இந்தியா மற்றும் அமெரிக்காவின் ராணுவ அமைச்சர்கள் மற்றும் அயல்துறை அமைச்சர்களின் 2 + 2 கூட்டம் புதுதில்லியில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றதில், “அடிப்படைப் பரிவர்த்தனை மற்றும் தகவல் ஒப்பந்தம்” (“BECA-Basic Exchange and Cooperation Agreement”) என்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.  இது புவியிட ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் என்று கூறப்பட்டிருக்கிறது.இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியா, அமெரிக்காவுடன் ராணுவக் கூட்டணி சம்பந்தமாக அனைத்து அடிப்படை ஒப்பந்தங்களும் நிறைவு பெற்றுள்ளன. மேலும் இந்த ஒப்பந்தமானது அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் கப்பற்படைகளின் “மலபார் பயிற்சிகள்” வரும் நவம்பரில் நடக்கவிருக்கும் பின்னணியில் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.

இந்த நடவடிக்கைகள், சமீபத்தில் சீனாவுடன் லடாக்கில் உள்ள எல்லைக் கோடு தொடர்பாக ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையில் நியாயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போதுஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை உருவாவதற்கு வெகுநாட்களுக்கு முன்பே இந்த ஒப்பந்தங்களுக்கான வேலைகள் தொடங்கிவிட்டன. கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே, ‘கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்தனை ஒப்பந்தம்’, ‘தகவல் மற்றும் பரஸ்பர இயங்குதன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம்’ மற்றும் நான்குநாடுகளின் அமைப்பை மேம்படுத்து வதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன.   

இந்த ஒப்பந்தங்கள் மூலமாக இந்திய ராணுவம், அமெரிக்காவின் ராணுவம் மற்றும் போர்த்தந்திர நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது. நம் நாட்டின் தகவல் தொடர்பு முறைகள் அனைத்தும் அமெரிக்காவிற்கு இனி முழுமையாகத் தெரியவரும் என்பதனால், நம் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும்ராணுவரீதியாக சுயமாக முடிவுகள் மேற்கொள்வது ஆகியவை கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் இந்தியாவை, அமெரிக்காவின் ஆயுதப் படைகளைச் சார்ந்திருக்கும் ஒரு நாடாக மாற்றியமைத்திருக்கின்றன.மேலும், அமெரிக்காவுடன் இவ்வாறுஉருவாகியிருக்கும் ராணுவக் கூட்டணி,இந்தியாவின் அயல்துறைக் கொள்கையிலும், நாட்டின் போர்த்தந்திர சுயாட்சியிலும் (strategic autonomy) கடும் விளைவுகளை ஏற்படுத்திடும்.  இவை நாட்டின் நலன்களுடன் ஒத்துப்போகவில்லை.மத்திய அரசு, நாட்டின் எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு சீனாவுடன் உயர் அரசியல் மற்றும் தூதரக அளவுகளில் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்திட வேண்டும். இதற்காக, இந்தியா, ஆசியாவில் அமெரிக்கா மேற்கொள்ள விரும்பும் புவி-அரசியல் போர்த்தந்திர சூழ்ச்சிகளுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ள னர். (ந.நி.)