tamilnadu

img

கான்பூர் முதல் கம்யூனிஸ்ட் மாநாடு - என்.ராமகிருஷ்ணன்

நேற்றைய இதழில் கான்பூர் கம்யூனிஸ்ட் சதிவழக்கு விசாரணையின்பொழுது பார்வையாளர் அமர் மன்றத்தில் சத்ய பக்தா என்பவர் அமர்ந்திருந்தார் என்று குறிப்பிட்டிருந்தோம். யார் அந்த சத்ய பக்தா? 

அவர் தேசிய மனப்பான்மைக் கொண்டவர். அதே நேரத்தில் ரஷ்யப் புரட்சி, லெனின், ரஷ்யாவின் சாதனைகள் போன்றவற்றையும் பத்திரிகையில் படித்து அந்த ஈர்ப்புக்கு ஆளானவர். ‘தலைமறைவு ரஷ்யா’ என்ற புத்தகத்தைப் படித்து ரஷ்யப் புரட்சியை குறித்து அறிந்து கொண்டவர். சிறிது காலம் கழித்து நாகபுரியிலிருந்து பிரணவீர் என்ற பெயரில் இந்தி மொழியில் ஒரு வார இதழை நடத்தினார். அப்போது பம்பாயில் ‘சோசலிஸ்ட்’ பத்திரிகையை நடத்தி வந்த எஸ்.ஏ.டாங்கேவுடன் தொடர்பு வைத்துக் கொண்டார். பின்னர் கான்பூருக்கு வந்த சத்ய பக்தா ஒரு புத்தகக் கடையை நடத்தியதோடு, மகாத்மா காந்தி, லெனின், கிலாபத் இயக்கத்தில் பிரபலமாக இருந்த முகமது அலி, சௌகத் அலி என்ற அலி சகோதரர்கள் ஆகியோரது படங்களை அச்சிட்டு விற்றார். போல்ஷ்விக் ரஷ்யாவைக் குறித்து பலரிடம் பேசுவார். இதன் மூலம் கம்யூனிஸ்ட் ஆதரவாளர் என்று முத்திரைக் குத்தப்பட்டு ரகசிய காவல்துறை கண்காணிப்புக்கு ஆளானார். உண்மையில் கான்பூர் சதி வழக்கில் காவல்துறை இவர் பெயரையும் சேர்த்திருந்தது. ஆனால் அரசாங்க வழக்கறிஞர்கள் இவர் பெயரை அந்த பட்டியலிலிருந்து நீக்கிவிட்டனர். 

சத்ய பக்தா தனது நண்பர்களை உறுப்பினராக்கி ஓர் அமைப்பை உருவாக்கினார். ஒரு புதிய கட்சி பிரகடனம் செய்தார். ஆங்கிலேய அரசாங்கம் முதலில் அதை தடை செய்தது. பின்னர் அந்தத் தடையை நீக்கியது. 1925ஆம் ஆண்டு இறுதியில் 250 உறுப்பினர்களை அதில் சேர்த்து விட்டார். அவர்களுக்கு கம்யூனிஸ்ட் கருத்துக்கள் எதுவும் தெரியாது. ஆனால் ரஷ்யப் புரட்சியின் சாதனைகள் மட்டும் தெரியும். 

கான்பூர் சதி வழக்கில் துவக்கம் முதல் நீதிமன்றத்திற்கு வந்து விவாதத்தைக் கவனித்து வந்த சத்ய பக்தா முதல் நாள் அரசாங்க வழக்கறிஞரான ரோஸ் அல்ஸ்டன் என்ற பாரிஸ்டர் கூறிய ஒரு வாக்கியத்தினால் மிகவும் ஈர்க்கப்பட்டார். “கம்யூனிச கருத்துக்களை ஆதரிப்பவர்கள் என்ற காரணத்தினாலோ அல்லது கம்யூனிசம் என்ற கொள்கைக்கெதிராகவோ இந்த வழக்கு தொடரப்படவில்லை” என்று அவர் கூறியது சத்ய பக்தாவுக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது. எனவே இப்பொழுது அந்த வாக்கியத்தை மனதில் கொண்டு இந்தியாவில் ஏன் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கக் கூடாது என்ற முடிவுக்கு சத்ய பக்தா வந்தார்.  இதைத் தொடர்ந்து அவர் பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டார். “இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் ஒரு கழகம் (society) கான்பூரில் நிறுவப்படவுள்ளதாகவும் அதனுடைய நோக்கமானது பொது மக்களிடையே கம்யூனிச போதனைகள் குறித்து பிரச்சாரம் செய்வது என்றும் அறிவித்தார். ஒரு பாட்டாளி வர்க்க இயக்கத்தையோ அல்லது வெகுஜன கிளர்ச்சியையோ துவக்கும் முன் இது ஒரு அவசியமான நடவடிக்கை என்று அவர் கருதினார். (சத்ய பக்தா : Early days of Communist movement in India) 

அச்சமயத்தில்தான் இந்திய தேசிய காங்கிரசின் 40 வது மாநாடு கான்பூரில் நடக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. அதைக் கண்ட சத்ய பக்தா தனது நண்பர்களுடன் ஆலோசித்து அவர்கள் உதவி செய்வதாக சொன்ன அடிப்படையில் “இந்தியன் கம்யூனிஸ்ட்டுகளின் முதல் வருடாந்தர மாநாடு 1925 டிசம்பர் மாத கடைசி வாரத்தில் கான்பூரில் நடைபெறும்” என்று அறிவித்தார். இந்த மாநாட்டுக்கு தலைமை வகிக்கும்படி இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரும், கம்யூனிஸ்ட் தலைவருமான ஷாபூர்ஜி சக்லத்வாலாவை கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் வந்து செல்ல கப்பல் பயணக் கட்டணம் ஏற்பாடு செய்வது சிரமமாக இருந்ததால் சிங்காரவேலரை மாநாட்டுக்கு தலைமை தாங்கி நடத்தி தருமாறு சத்ய பக்தா கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் சம்மதித்தார். இதைத் தொடர்ந்துதான் முசாபரும் அந்த மாநாட்டிற்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டு முசாபர் அகமதுவிற்கு சத்ய பக்தா 30 ரூபாய் அனுப்பினார். 

திட்டமிட்டபடி கம்யூனிஸ்ட் மாநாடு டிசம்பர் 26ஆம் தேதி துவங்கியது. சிங்காரவேலர் தலைமை வகித்தார். கான்பூரின் பிரபல காங்கிரஸ் தலைவரும், இடதுசாரி சிந்தனை கொண்டவருமான மௌலானா ஹஸரத் மொகானி வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த மாநாடு எவ்வாறு நடைபெற்றது என்பதை சத்ய பக்தாவே விவரித்தது சுவையாக இருக்கும்.  “மாநாடு ஒரு பழைய கூடாரத்தில் நடைபெற்றது. நாற்காலிகளோ, மேசைகளோ கிடையாது. மின்சார விளக்குகள் கிடையாது. ஒலிபெருக்கி கிடையாது. ஏன், அமர்வதற்கு நல்ல ஜமக்காளம் கூட விரிக்கப்படவில்லை. ஆனால் ஒரு லட்சிய வேகம் இருந்தது. சிங்காரவேலுச் செட்டியாருக்கு போக்குவரத்து செலவுக்கென்று எதுவும் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை. வெறும் ஐநூறு ரூபாயில் இந்த மாநாட்டை நடத்தினோம். (சத்ய பக்தா முன் சொன்ன கட்டுரை) 

இந்த மாநாட்டில் லாகூரைச் சேர்ந்த சும்சுதீன் ஹாசன்,பம்பாயைச் சேர்ந்த எஸ்.வி.காட்டே, கே.என்.ஜோக்லேகர், ஆர்.எஸ்.நிம்ப்கர், பிகானீரைச் சேர்ந்த ஜானகி பிரசாத் பாகர் கட்டா, ஜான்சியைச் சேர்ந்த அயோத்யா பிரசாத், சென்னையைச் சேர்ந்த சி.கிருஷ்ணசாமி அய்யங்கார் ஆகியோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணசாமி அய்யங்கார், ராஜாஜியின் உறவினராவார். மாநாட்டுக்கு தலைமை வகித்த சிங்காரவேலர் தொடக்கத்தில் ஜெர்மனியில் பிற்போக்காளர்களால் படுகொலை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் ரோஸா லக்சம்பர்குக்கும், காரல் லீப்னெக்டுக்கும், பிரான்ஸ் நாட்டு தொழிலாளர் தலைவர் எம்.ழுவாரே என்பவருக்கும் அஞ்சலி செலுத்தினார். அதேபோன்று சென்னை கான்பூர் மற்றுமிதர இந்திய நகரங்களில் சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை நீத்தவர்களுக்கும் சிங்காரவேலர் அஞ்சலி செய்தார். மறைந்த தலைவர் லெனினுக்கு அஞ்சலி செலுத்திப் பேசுகையில் ‘தொழிலாளர் - விவசாயிகள் ‘கெஸட்’ பத்திரிகையில் லெனின் குறித்து, தான் எழுதியிருந்த புகழுரையை சிங்காரவேலர் படித்துக் காண்பித்தார்.

(தொடர்ச்சி நாளை...)