tamilnadu

img

மும்மொழிக்கல்விக் கொள்கையை எப்போதும் ஏற்க மாட்டோம் - எடப்பாடி பழனிச்சாமி

 தமிழகத்தில் மும்மொழிக்கல்விக் கொள்கையை எப்போதும் ஏற்க மாட்டோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கையில் மும்மொழித்திட்டம் இடம் பெற்றுள்ளது. இதற்கு நாட்டின் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் மும்மொழிக்கல்விக் கொள்கையை எப்போதும் ஏற்க மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையல் இன்று புதிய கல்விக் கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 1968ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் அண்ணா, தமிழகத்தில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியதை சுட்டிக்காட்டியுள்ளார். வரலாறு போற்றும் அந்த தீர்மானத்தை அடுத்து, தமிழ்நாட்டில் பாடத்திட்டத்தில் இருந்து இந்தி மொழி முழுமையாக நீக்கப்பட்டது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 
அண்ணாவால் தெளிவுற உரைக்கப்பட்ட இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 1986ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது என்றும், திணிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுமானால் அதை எதிர்த்து முறியடிப்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சூளுரைத்ததையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் நினைவுகூர்ந்துள்ளார்.  இப்படிப்பட்ட மாபெரும் தலைவர்கள் வழி வந்த அதிமுக அரசு, வரைவு தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டபோதே அதில், மும்மொழிக் கொள்கை இடம் பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி தீவிரமாக எதிர்த்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையையே கடைப்பிடிப்போம் என உறுதிபட தெரிவித்து கடந்த ஆண்டு ஜூன் 26ம் தேதி பிரதமருக்கு தான் கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், அதனைத் தொடர்ந்து தனது சுதந்திர தின உரையிலும், சட்டமன்ற விவாதங்களிலும் இரு மொழிக் கொள்கை மீதான அரசின் உறுதியை தெளிவாக எடுத்துரைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதிமுக அரசு மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும் இருமொழிக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும் வருத்தத்தையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு தனது மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள பிரதமரை கேட்டுக்கொள்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 
தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்படும்போது அந்த பாதிப்பைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு அதிமுக அரசுதான் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.