tamilnadu

img

இந்தியாவில் வாழ உரிமையில்லையா எனக்கு ?  - ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி குமுறல்

மத்திய ரிசர்வ் படையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி விட்டு கடந்த 2002-ஆம் ஆண்டில் தலைமை காவலராக ஓய்வு பெற்றவர் முகமது.  இவர் தற்போது டெல்லியில் உள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்கியுள்ளார்.
தில்லியில் கடந்த வாரம் 25ம் தேதி நடந்த வன்முறையின் முஸ்தபாபாத்தில் உள்ள ஈத்காவில் உள்ள நிவாரண முகாமில் உள்ளவர்களும் தாக்கப்பட்டனர். அதில் பாதிக்கப்பட்டவர்களில் முகமதுவும் ஒருவர் . வன்முறையின் போது பஹாரி விகார் பகுதி அருகே இருந்த இவரது வீடு போராட்டத்தின் போது தீக்கிரையாக்கப்பட்டதை அடுத்து இவர் நிவாரண முகாமில் தங்கியுள்ளார். 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 200-300 போராட்டக்காரர்கள், எனது வீட்டின் மீது கற்களை எறிந்ததுடன், துப்பாக்கியாலும் சுட்டனர். அந்த நேரத்தில் நான் எனது 26 வயது மகனுடன் வீட்டின் உள்ளே இருந்தேன். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும், மாடியிலிருந்து குதித்து பக்கத்து வீட்டுக்கு ஓடி விட்டோம். கடந்த 29-ஆம் தேதி திருமணம் முடித்த விட்டு வந்த எனது மருமகளின் நகைகள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர் என்று கூறினார். இதையடுத்து தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விட்டேன். எனது வீட்டின் முதல் தளம் முழுமையாக எரிந்து நாசமாகிவிட்டது. மகன்களின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பாதுகாத்து கொள்ள, எனது வீட்டை விட்டு சிறிது தூரம் தள்ளி நிறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முகமது, 1991-ஆம் ஆண்டில் நான் காஷ்மீரில் பணியாற்றி காயமடைந்தேன். தற்போது வரை இதுபோன்ற வன்முறையை கண்டதில்லை. இதனால், எனக்கு இந்தியாவில் வாழ உரிமையில்லை என்று நினைக்க தோன்றுகிறது என்று தனது குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.