அசாம் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக தற்போது 24 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களிலுள்ள சுமார் 3 ஆயிரம் கிராமங்கள் பெரும் பாதிப்பில் சிக்கியுள்ளன.
வெள்ளத்தால் வீடுகள், சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. சுமார் 47 ஆயிரம் பேர் வீடிழந்து தவிக்கின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் 649 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 110 பேர் வெள்ளத்தாலும், நிலச்சரிவில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கவெள்ளத்தால் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அசாமின் உலகப் புகழ் பெற்ற காசிரங்கா தேசியப் பூங்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 8 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்பட 100க்கு மேற்பட்ட காட்டுயிர்கள் உயரிழந்துள்ளன. உலகிலேயே ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அதிக அளவில் இருக்கும் இடம் இந்த காசிரங்கா தேசியப் பூங்காதான். இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் அழிவின் விளிம்பில் இருந்த இவை கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காசிரங்கா தேசியப் பூங்காவில் மட்டும் குறைந்தது 2,400 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன.
ஆனால், இந்த ஆண்டு பருவமழையில் இந்த பரந்து விரிந்த தேசியப் பூங்காவில் 85 சதவீதப் பரப்பளவு வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் அங்கு வசித்து வந்த விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.