ஜேஎன்யு துணை வேந்தர் ராஜினாமா செய்திட வேண்டும் என்று 250 சர்வதேச கல்வியாளர்கள் கோரியுள்ளார்கள். ஜேஎன்யு வளாகத்திற்குள் நடைபெற்றுள்ள வன்முறை ஜனநாயகத்தின் அனைத்து நெறிமுறைகளையும் மீறிய செயலாகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் பலவற்றைச் சேர்ந்த 250 கல்வியாளர்கள் கையெழுத்திட்டு இவ்வாறு கோரிக்கை மனுவை அனுப்பியிருக்கிறார்கள். வளாகத்திற்குள் ஜனவரி 5 அன்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஜேஎன்யு துணை வேந்தர் எம். ஜெகதீஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்திட வேண்டும் என்று அவர்கள் கோரியிருக்கிறார்கள். இவ்வாறு கையெழுத்திட்டிருப்பவர்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து, சிலி, மெக்சிகோ, அர்ஜைன்டைனா, தைவான், கிரீஸ், ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன், ஸ்பெயின், பிரேசில், போர்த்துக்கல், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்களாவார்கள். ஆயுதந்தாங்கிய மற்றும் அரசியல் நோக்கத்துடனான கும்பல் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருப்பது, ஜனநாயகத்தின் அனைத்து நெறிமுறைகளையும் மீறிய செயலாகும் என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும், இது கல்வி சுதந்திரத்தின் நெறிமுறைகளையும், ஆட்சியாளர்களின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளிலிருந்து பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்களையும், அவர்களின் ஆசிரியர்களையும் பல்கலைக்கழக நிர்வாகம் பாதுகாத்திட தவறிவிட்டது என்றும் அவர்கள் மேலும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவற்றின் மூலம் ஜேஎன்யு நிர்வாகமும், குறிப்பாக துணை வேந்தரும் அனைத்து நம்பகத்தன்மையையும் இழந்து விட்டார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
(ந.நி